For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்தில் லாரி ஸ்டிரைக்-தமிழகத்தில் கோடிக்கணக்கில் பொருட்கள் தேக்கம்

By Staff
Google Oneindia Tamil News


பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் நேற்று நள்ளிரவு முதல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் குதித்துள்ளதால் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தேங்க ஆரம்பித்துள்ளன. இந்த போராட்டம் தொடர்ந்தால் தமிழகத்துக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.

கர்நாடக அரசு அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இந்த கருவிகளைப் பொருத்த லாரி உரிமையாளர்கள் தயாராக இல்லை.

இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் அம்மாநில அரசுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந் நிலையில் அரசு உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தினர் நேற்று நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு லாரிகள் செல்ல வேண்டாம் என தமிழக லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் செங்கோடன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து தினமும் 5,000க்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கு சென்று வருகின்றன. கர்நாடகாவில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படும் பனியன், தீப்பெட்டி, கயிறு, இயந்திர உதிரிபாகங்கள் போன்றவை தடைபட்டுள்ளன.

நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றி செல்லும் லாரிகள் அனைத்தும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஏற்கனவே சரக்குகளுடன் வட மாநிலங்களுக்கு கிளம்பிய தமிழக லாரிகள், பாதி வழியில் கர்நாடக மாநிலத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே ரோட்டோரங்களிலும் சோதனைச் சாவடிகளிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

சேலத்தில் லாரி மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. அதுபோல தமிழகத்தில் இருந்து கர்நாடக செல்லும் அனைத்து லாரிகளும் ஓசூரில் நிறுத்தப்பட்டுவிட்டன.

ஓசூர் முழுவதும் வரிசையாக சரக்கு லாரிகள் ஆயிரக்கணக்கில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கூறியதாவது:-

தமிழகத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 5,000 லாரிகள் கர்நாடக மாநிலம் வழியாக மும்பை, குஜராத், டெல்லி போன்ற வட மாநிலங்களுக்கு சரக்குகள் ஏற்றிச் செல்கின்றன.

கர்நாடகத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் இருந்து கர்நாடகம் வழியாக வடமாநிலங்களுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு செல்லும் அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன.

கர்நாடக அரசு உடனே இதில் தலையிடாவிட்டால் லாரி உரிமையாளர்கள், உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் உட்பட அரசுக்கும் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும் என்றார்.

கோடிக்கணக்கில் இழப்பு:

இந்த ஸ்டிரைக்கால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தேக்கமடைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

லாரிகள் ஓடாததால், ஜவுளி, மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு செல்வது தடைபட்டுள்ளது.

இந்த ஸ்டிரைக் காரணமாக தமிழகத்தில் தினசரி ரூ. 100 கோடி வரை இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பெங்களூரில் டிராபிக் ப்ரீ:

டிராபிக் ஜாம்களுக்கு பேர் போன பெங்களூரில் இந்த லாரிகள் வேலை நிறுத்தத்தால் கொஞ்சம் போக்குவரத்து எளிதாகியுள்ளது. குறிப்பாக எலெக்ட்ரானிக் சிட்டி, ஐடிபிஎல் போன்ற சாப்ட்வேர் நிறுவனங்கள் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் லாரிகள் இயங்காததால் போக்குவரத்து கொஞ்சம் குறைவாகவே உள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தனியார் வேன்கள், டாக்சிகள் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், சாப்ட்வேர் மற்றும் பிபிஓ நிறுவனங்களுக்கு வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் இதில் பங்கேற்கவில்லை.

ஆனாலும், பிபிஓ-கால் சென்டர்களுக்கு செல்லும் வாகனங்களை சில இடங்களில் கும்பல்கள் வழி மறித்து போராட்டம் நடத்தியதால் பிடிஎம் லே-அவுட் உள்ளிட்ட பல பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு நிலவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X