செல்வாக்கை இழந்து வருகிறது திமுக-வெங்கைய நாயுடு
மதுரை: தமிழகத்தில் திமுக படிப்படியாக தனது செல்வாக்கை இழந்து வருகிறது என பாரதிய ஜனதாவின் அகில இந்திய துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியால் தனது முழு ஆட்சி காலத்தையும் நீடிக்க முடியாது. காங்கிரஸ் ஒரு நொண்டி வாத்து. அக்கட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், மதிமுக, இடதுசாரி ஆகிய கட்சிகள் இழுபறியில் இருப்பதால் எந்த நேரத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.
2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இதனை தெளிவாக்கி விட்டன.
இது தவிர விவசாயிகள் பிரச்சனை, வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு காரணங்களால் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருகிறது.
தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தான் பதில் சொல்ல வேண்டும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மரியாதை நிமித்தமாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.
விடுதலைப் புலிகளின் வன்முறையை பாஜக ஒருபோதும் ஆதரிக்காது. சேது சமுத்திர திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு மாற்று திட்டத்தை தான் செயல்படுத்த சொல்கிறோம்.
தமிழகத்தில் திமுக தனது செல்வாக்கை படிப்படியாக இழந்து வருகிறது என்றார் வெங்கைய நாயுடு.












Click it and Unblock the Notifications