ஓட்டப்பிடாரத்தில் 4 போலி டாக்டர்கள் கைது
ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரத்தில் 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலி டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருவது பெருத்து விட்டதாக நெல்லை சரக டிஐஜி கண்ணப்பனுக்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து போலி டாக்டர்களை கைது செய்யும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஓட்டப்பிடாரத்தில் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சந்தேகப்படும்படி செயல்பட்ட டாக்டர்களை கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வெள்ளாரம் பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் பொது மக்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்து வருவது தெரிந்தது. அவர் மருத்துவ படிப்பு படிக்காமல் போலிதனமாக டாக்டர் தொழில் செய்து வந்துள்ளார்.
இவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீசார் மாறுவேடத்தில் சிகிச்சை பெற செல்வது போல் சென்று அவரை கைது செய்தனர்.
இதேபோல் ஓட்டப்பிடாரம் மெயின் ரோட்டில் ஆஸ்பத்திரி நடத்தி வந்த அந்தோணி மைக்கேல் மகன் அமலதாஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குறுக்கு சாலையில் கணவன்-மனைவி போலிதனமாக ஆஸ்பத்திரி நடத்தி வருவது போலீசாருக்கு தெரிய வந்தது. அங்கு போலீசார் சென்றனர். நோயாளிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த சந்திரசேகரன், சந்திரா ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம் பகுதியில் ஓரே நாளில் 4 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல போலி டாக்டர்கள் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. விரைவில் அவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications