அரசவை கவிஞராகும் வைரமுத்து
தமிழக அரசின் அரசவைக் கவிஞராக கவிப் பேரரசு வைரமுத்து நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பை முதல்வர் கருணாநிதி ஓரிரு நாட்களில் வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.
மறைந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் அரசவைக் கவிஞர் பதவி. இப்பதவிக்கு முதன் முதலில் நியமிக்கப்பட்டவர் கவியரசர் கண்ணதாசன். 1978ம் ஆண்டு இப்பதவியில் நியமிக்கப்பட்ட கண்ணதாசன், மரணமடையும் வரை அப்பதவியில் இருந்தார்.
அதன் பின்னர் அப்பதவியை புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் அலங்கரித்துள்ளனர். தற்போது இப்பதவியில் யாரும் இல்லை. காலியாக உள்ளது.
இந்த நிலையில் வைரமுத்துவை அப்பொறுப்பில் நியமிக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து, திரைப்படம் சாராத கவிதைகளையும் கணக்கில்லாமல் படைத்துள்ளார்.
திரைப் பாடல்கள், கவிதைகள் தவிர ஏராளமான நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஐந்து முறை வென்று சாதனை படைத்தவர் வைரமுத்து. அவரது கள்ளிக்காட்டு இதிகாசம், சாகித்ய அகாடமி விருதைப் பெற்றது. 2003ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றார்.
அரசவையின் கவிஞர் பதவி வைரமுத்துவை தேடி இப்போதுதான் வருகிறது என்ற போதிலும், முதல்வர் கருணாநிதியின் 'மன' அவையில் அவர் நிரந்தர கவிஞராக நீண்ட காலமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.