2 லட்சம் வெளிநாட்டவரின் வேலையை பறிக்க மலேசிய அரசு முடிவு
கோலாலம்பூர்: மலேசியாவில் வேலை செய்து வரும், வெளிநாட்டு ஊழியர்களில் இரண்டு லட்சம் பேரை அடுத்த ஆண்டுக்குள் வேலையை விட்டு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
மலேசியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியா, தாய்லாந்து, இந்தோனேசியா நாடுகளை சேர்ந்தவர்கள்.
வெளிநாட்டு ஊழியர்கள் அதிகம் பேர் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய தயாராக இருப்பதால், அந்நாட்டு மக்களுக்கு வேலை திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தொடர்ந்து புகார்கள் மலேசிய அரசு அதிகாரிகளுக்கு வந்து கொண்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டு மட்டும் 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
ஆனால் இந்த வேலை வாய்ப்புகளில் 20 முதல் 30 சதவீதம் வேலைகளை வெளிநாட்டு ஊழியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர் என மலேசிய அரசு கூறியுள்ளது.
உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பு எளிதாக கிடைப்பதற்காக மலேசியாவில் பணிபுரிந்து வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக அங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை 2009ம் ஆண்டுக்குள் 18 லட்சமாக குறைக்கவும், 2015ம் ஆண்டுக்குள் 15 லட்சமாக குறைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர் அதிகாரி ராஜா அசார் ராஜா அப்துல் மனாப் தெரிவித்துள்ளார்.
ஆனால் கட்டமைப்பு, உற்பத்தி துறை மற்றும் தோட்டத் தொழில்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த துறைகளில் பணியாற்ற கடும் உடல் உழைப்பு தேவை. மலேசியர்கள் கடுமையாக உழைக்க தயாராக இல்லை. எனவேதான் கடுமையான பணிகளில் வெளிநாட்டினரை தாராளமாக நியமித்துக் கொண்டு ஒயிட் காலர் வேலைகளில் மலேசியர்களை நியமிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மலேசியாவில் ரப்பர், தேக்கு, பாமாயில் தோட்டங்களில் மட்டும் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் 5 லட்சம் பேர் வெளிநாட்டு ஊழியர்கள்.
மலேசியாவில் உள்ள எஸ்டேட்டுகளில், ஏராளமான வெளிநாட்டு ஊழியர்கள் பணியாற்றுவதும் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால், எஸ்டேட்டுகள் முற்றிலுமாக வெளிநாட்டினர் வசமாகி விடும் என அந்நாட்டு அமைச்சர் பீட்டர் சின் தெரிவித்துள்ளார்.
ஸ்கில்டு ஒர்க்கர்ஸ் என்றழைக்கப்படும் திறமை வாய்ந்த ஊழியர்கள் 10 ஆண்டுகள் வரை மட்டுமே மலேசியாவில் பணியாற்ற அனுமதிக்கப்படுவர். வீட்டு வேலைக்கு வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதிலும் கட்டுப்பாடு விதிக்கப்படும்.
முன்பு, ரூ.36,000க்கு மேல் ஊதியம் உள்ள குடும்பத்தினர் மட்டுமே வெளிநாட்டு ஊழியர்களை வீட்டு வேலைக்கு அமர்த்தி கொள்ள முடியும். இனிமேல், ரூ.52,000க்கு மேல் ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே இதற்கான அனுமதியை பெற முடியும் என்றும் மனாப் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டினர் என்று மலேசிய அரசு குறிப்பிட்டாலும் கூட இந்தியத் தொழிலாளர்களை குறி வைத்தே இந்த நடவடிக்கையில் மலேசிய அரசு இறங்கியுள்ளதாக கருதப்படுகிறு.
மலேசியாவில் வேலை பார்க்கும் வெளிநாட்டினரில் இந்தியர்கள்தாந் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.