தோஹா, மஸ்கட்டுக்கு தினசரி விமானம்: ஜெட் ஏர்வேஸ்
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தோஹா, மஸ்கட் ஆகிய வளைகுடா நாடுகளுக்கு தினசரி சேவையை தொடங்கவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த நிலையில், கோழிக்கோட்டிலிருந்து மஸ்கட், தோஹாவுக்கு புதிய தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. இந்த சேவை வரும் 23ம் தேதி (புதன்கிழமை) முதல் துவங்க உள்ளது.
கோழிக்கோட்டிலிருந்து காலை 9-30 மணிக்கு புறப்பட்டு 11-35க்கு மஸ்கட்டை சென்றடையும். மஸ்கட்டிலிருந்து அதிகாலை 2-30 மணிக்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு கோழிக்கோடு வந்தடையும்.
இதே போல் கோழிக்கோடிலிருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு 10 மணிக்கு தோஹா சென்றடையும். காலை 10 மணிக்கு தோஹாவிலிருந்து புறப்பட்டு மாலை 4-55க்கு கோழிக்கோடு சென்றடையும்.
இந்த விமான சேவை செவ்வாய், சனிக்கிழமைகளை தவிர வாரத்தில் 5 நாட்களும் செயல்படும்.
செவ்வாய், சனியன்று 1 மணி நேரம் தாமதமாக தோஹாவுக்கு புறப்படும்.
அதே நாளில், கொச்சி - மஸ்கட், மும்பை - தோஹா ஆகிய புதிய விமான சேவைகளும் தொடங்கப்படவுள்ளன.
கொச்சி - குவைத், கொச்சி - பஹ்ரைன், மும்பை - பஹ்ரைன், டெல்லி - குவைத் ஆகிய விமான சேவைகளை ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் தினசரி நேரடி விமான சேவையாகும்.