ராமநாதபுரம் அருகே 2 பஸ்கள் மோதல்: ஒருவர் பலி, 51 பேர் காயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். 51 பயணிகள் காயம் அடைந்தனர்.
ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுதானந்தன் வயல் என்ற இடத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்று கொண்டிருந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பேருந்தும், கோவையில் இருந்து ராமேஸ்வரம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் இன்று காலை 6 மணிக்கு நேருக்கு நேராக மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் சுற்றுலா பேருந்தில் வந்த மைசூரை சேர்ந்த கைட் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். மேலும் இரு பேருந்துகளின் டிரைவர், கண்டக்டர் உட்பட 51 பேர் காயமடைந்து ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
இந்த விபத்தால் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.