கலைஞர் டிவியின் புதிய 'இசை சேனல்'
சென்னை: கலைஞர் டிவி குழுமத்திலிருந்து புதிதாக இசையருவி என்ற இசை சேனல் துவக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஒளிபரப்பு துவங்கியுள்ளது.
சன் டிவிக்கும், திமுகவுக்கும் இடையிலான உறவு முறிந்ததும் படு வேகமாக தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. சன் டிவிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வரும் கலைஞர் டிவி குழுமத்திலிருந்து தற்போது புதிதாக கலைஞர் இசையருவி என்ற புதிய இசை சேனல் வெளி வருகிறது.
கடந்த 2 நாட்காக இந்த சேனல் தனது சோதனை ஒளிபரப்பைத் தொடங்கி தொடர்ந்து பாடல்களை ஒளிபரப்பி வருகிறது. விரைவில் இதன் முழுமையான ஒளிபரப்பு தொடங்கவுள்ளதாம்.
இதையடுத்து செய்தி சேனல் ஒன்றை தொடங்கவும் கலைஞர் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது.
சன்-கலைஞரின் செய்திப் போட்டி:
இதற்கிடையே சன் டிவிக்கும், கலைஞர் டிவிக்கும் இடையிலான போட்டா போட்டி நாளுக்கு நாள் கடுமையாகி வருகிறது. கலைஞர் டிவியின் செய்திகளுக்குப் போட்டியாக, சன் டிவி தனது இரவு நேர செய்தி ஒளிபரப்பு நேரத்தை மாற்றி அமைத்துள்ளது.
முன்பு சன் டிவியில் காலை 8 மணி, பிற்பகல் 1.30 மணி, இரவு 8 மணிக்கு செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. மாலை 6 மணிக்கு தலைப்புச் செய்திகள் மட்டும் ஒளிபரப்பாகும்.
கலைஞர் டிவி வந்த பிறகு செய்தி நேரங்களில் அதிரடி மாற்றத்தை செய்தது சன் டிவி.
காலை நேரச் செய்தியை 7.30க்கும், இரவு நேரச் செய்தியை 7.30 மணிக்கும் மாற்றியது. மேலும் மதிய நேரச் செய்தியை ரத்து செய்து விட்டு 2 மணிக்கு தலைப்புச் செய்திகளை ஒளிபரப்பியது சன்.
சன் டிவியின் இந்த மாற்றத்தைத் தொடர்ந்து கலைஞர் டிவியும் போட்டியில் குதித்தது. இரவு நேரச் செய்தியை 7 மணிக்கு மாற்றியது.
சவாலை சந்திக்க சன் டிவியும் நேற்று முதல் தனது இரவு நேரச் செய்தியை 7 மணிக்கு மாற்றி விட்டது.
7.30 மணிக்கு சன் டிவியில் பிரபலமான ஆனந்தம் தொடரும், 8 மணிக்கு மேகலா தொடரும் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளது.
''சபாஷ்.. சரியான போட்டி''!