பழனியில் இன்று தைப்பூச தேரோட்டம்
பழனி: முருகப் பெருமானின் 3வது படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3வது படை வீடு பழனி. இங்கு ஆண்டு தோறும் தைப்பூச விழா வெகு விமரிசையாக நடைபெறும். தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி விழா இன்று மாலை நடைபெறுகிறது.
தைப்பூச விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தமிழகம், இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமின்றி உலகின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் முருகப் பெருமானை வழிபடுவதற்கு மாலை போட்டு வந்த வண்ணம் உள்ளனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு வந்து குவிந்துள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்றிரவு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து வெள்ளி தேரில் சாமி வீதி உலா நடந்தது.
இன்று காலை 6 மணிக்கு சண்முகா நதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் தொடர்ந்து தேர் ஏற்றம் நடைபெற்றது. இன்று மாலை மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுக்கின்றனர்.
தைப்பூச விழாவை முன்னிட்டு பழனியில் 15 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்துள்ளதால் எங்கு திரும்பினாலும் அரோகரா..அரோகரா.. கோஷம் விண்ணை பிளக்கிறது.
விண்ணுக்கு சென்ற பூ விலை:
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் 1 கிலோ மல்லிகைப் பூ ரூ.220 வரை விற்கப்படுகிறது.
தைப்பூச விழாவையொட்டி கோவில் நிர்வாகம், பழனி நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை ஆகியோர் சேர்ந்து பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்துள்ளனர்.
3,000க்கும் மேற்பட்ட போலீசார் பழனியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.