ராமேஸ்வரம் கோவில் பசுக்கள் சாவு: 3 ஊழியர்கள் சஸ்பெண்ட்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள பசுக்களை சரிவர பராமரிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டு, 24 பசு மாடுகள் இறக்கக் காரணமான 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு நபர்கள் தானமாக அளித்த பசு மாடுகள் பல உள்ளன. இந்த பசுக்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. தீவனங்கள் சரிவர கொடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக 15 மாடுகள் இறந்து விட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று குற்றம் சாட்டி அறிக்கை விட்டார்.
ஆனால் ஜெயலலிதா சொல்வதைப் போல 15 மாடுகள் இறக்கவில்லை, மாறாக 24 மாடுகள் பரிதாபமான முறையில் இறந்துள்ளதாக தற்போது தெரிய வந்துள்ளது.
பசுக்கள் சரிவர பராமரிக்கப்படாததாலும், தீவனங்கள் சரிவர கொடுக்கப்படாததாலும்தான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அங்கிருக்கும் மிச்சம் மீதி பசுக்களும் கூட மிகவும் கவலைக்கிடமான நிலையில்தான் உள்ளன. பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமை பக்தர்களிடையே பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்கள் புனிதமாக வணங்கும் பசுக்களுக்கு ராமேஸ்வரம் கோவிலில் ஏற்பட்டுள்ள இந்த நிலை பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.
பசுக்களை சரியாக பராமரிக்காமல் அவற்றின் மரணத்திற்குக் காரணமான 3 ஊழியர்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சுவாமிநாதன் விசாரணை நடத்தினார். விசாரணையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 24 பசு மாடுகள் இறந்துள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து பசு பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களான ஜோதி போஸ், ராமநாதன், ஆறுமுகம ஆகியோரை சஸ்பெண்ட் செய்து அவர் உத்தரவிட்டார்.
தற்போது கோவில் கோசாலையில் உள்ள 40 மாடுகளையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்துள்ளனர். அவற்றில் பல மாடுகளின் நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாடுகளுக்கு சத்து ஊசி போடப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications