தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அழகிரி நீதிமன்றத்தில் ஆஜர்
சித்தூர்: முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த 2003ம் ஆண்டு மே 20ம் தேதி திமுகவின் முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் முதல்வரின் மகன் மு.க.அழகிரி உட்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து இந்த வழக்கு விசாரணை ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கு விசாரணைக்காக மு.க.அழகிரி உட்பட 12 பேர் நேற்று சித்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி சிங்கராச்சாரி வரும் பிப்ரவரி 4ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜராக வருவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.