போராட்டங்களை தூண்டும் ஜெ.: திமுக எம்.எல்.ஏக்கள் கண்டனம்
சென்னை: அரசுக்கு எதிராக பொய்யான புகார்களைக் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்துமாறு அதிமுகவினரை தூண்டி விட்டு வருகிறார் ஜெயலலிதா என திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று மாலை அண்ணா அறிவாலயம், கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
திமுக அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான புகார்களைக் கூறி அதிமுகவினரை போராட்டம் நடத்துமாறு தூண்டி விட்டு வருகிறார் ஜெயலலிதா. ராமேஸ்வரம் கோவிலில் 15 பசு மாடுகள் பட்டினியால் இறந்து விட்டதாக கூறி திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அவரது ஆட்சியில் திருச்செந்தூர் கோவிலில் 15 மாடுகள் இறந்ததை அவர் மறந்து விட்டார் என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. அவர் கூறுவது மாற்றுப் பாதை அல்ல, மக்களை ஏமாற்றும் பாதை. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக் கட்டைப் போடும் ஜெயலலிதாவின் செயல் கண்டனத்துக்குரியது என்று ஒரு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.
தை முதல் நாளான பொங்கலன்றே தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்படும் என சட்டசபையில் ஆளுநர் உரை மூலம் அறிவிக்கச் செய்ததற்காக முதல்வர் கருணாநிதிக்கு இக்கூட்டம் பாராட்டு தெரிவிக்கிறது என்று ஒரு தீர்மானமும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அரசின் முடிவுக்குப் பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications