ஜல்லிக்கட்டை பாதுகாக்க தனி சட்டம்-பீட்டர் கோரிக்கை
சென்னை: ஜல்லிக்கட்டு மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களைப் பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படுமா என சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் இன்று உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் மைதீன்கான் பதில் அளிக்கையில்,
தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் திறந்த வெளி விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை அமைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 27 மாவட்டங்களில் இவை அமைக்கப்பட்டுவிட்டன. மேலும் 3 மாவட்டங்களில் இந்த வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவை தவிர 11 மினி விளையாட்டு அரங்கங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அதில் 6 அரங்கங்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. 5 அரங்கங்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன.
விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், தினேஷ் கார்த்திக், வீராங்கனை கவிதா உள்பட பல்வேறு வீரர்-வீராங்கனைகளுக்கு முதல்வர் ரூ.2.30 கோடி ஊக்கத் தொகை வழங்கியுள்ளார்.
பாரம்பரிய விளையாட்டுக் களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன என்றார்.
அப்போது பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்) எழுந்து, தமிழ்நாட்டின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சமீபத்தில் நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் அந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுக்களைப் பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த மைதீன்கான், உறுப்பினர் நல்ல நோக்கத் துடன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி முதல்வருன் கலந்து பேசி வீர விளையாட்டுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு-9 பேர் காயம்:
இந் நிலையில் இன்று மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது.
பாலமேடு, அலங்காநல்லூரைத் தொடர்ந்து நடந்த இந்த போட்டிகளில் நீதிமன்ற நிபந்தனைப்படி மருத்துவக் குழுவினர் ஜல்லிக்கட்டு வீரர்களை பரிசோதித்தனர். மேலும் கால்நடை டாக்டர்கள் மாடுகளை பரிசோதித்த பின்னரே மைதானத்திற்குள் அனுமதித்தனர்.
இந்தப் போட்டியில் 100 மாடுகள் களமிறக்கப்பட்டன. அவற்றை அடக்க முயன்ற 11 பேர் காயமடைந்தனர்.