பில்டர்கள், காண்டிராக்டர்களுக்கு ரூ. 160க்கு சிமென்ட் - தமிழக அரசு
சென்னை: பில்டர்கள், பில்டிங் காண்டிராக்டர்கள், கட்டுமானத் தொழில் துறையில் இருப்போர், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்துள்ள இறக்குமதி சிமென்ட்டை மூடை ரூ. 160 என்ற விலையில் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட ஓபிசி 43 ரக சிமென்ட்டை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் மூட்டைக்கு ரூ. 160 என்ற விலையில் பெற்றுக் கொள்ள தமிழ்நாடு சிமென்ட் கழகம் (டான்செம்) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சிமென்ட்டைப் பெற விரும்புவோர் (பொதுமக்கள் உள்பட) குறைந்தது 480 மூடைகளைப் (24 டன் கொண்ட கன்டெய்னர்) பெற முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
சிமென்ட்டை கொண்டு செல்வது, கண்டெய்னர்களிலிருந்து இறக்குமதி, தர மதிப்பீடு செய்து கொள்வது ஆகியவை வாங்குவோரின் பொறுப்பாகும்.
இந்த இறக்குமதி சிமென்ட்டைப் பெற விரும்புவோர், பொது மேலாளர் (விற்பனை), டான்செம்-மில் தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். அல்லது 044-28525477 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பெயர்களைப் பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.