மதுரை ரவுடி 'வரிச்சியூர்' செல்வம் குண்டர் சட்டத்தில் கைது
மதுரை: சமீபத்தில் மதுரை போலீஸாரால் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம், குண்டர் சட்டத்தின் கீழும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த செல்வம் மதுரை பகுதியில் பெரிய ரவுடி ஆவான். கட்டப் பஞ்சாயத்து, ஆள் கடத்தல், கொலைகள், கொள்ளை, கூலிக்கு ஆட்களை அடிப்பது, வெட்டுவது, வீடுகளை காலி செய்வது என தீவிர 'சமூக நலப் பணிகளில்' ஈடுபட்டிருந்தவன்.
இவனது தொல்லை மிகவும் அதிகமானதால் இவனை எண்கெளன்டரில் போட்டுத் தள்ள முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதை உணர்ந்து கொண்ட செல்வம் திருந்தி வாழ்வதாகக் கூறி போலீஸாரிடம் சரணடைந்தான்.
இதையடுத்து ஜெயிலுக்குள் போனாலும் அங்கிருந்தபடியே தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து செய்வதையும், ஆட்களை மிரட்டுவதையும் தொடர்ந்து வந்தான்.
அதேபோல சின்ன அனுப்பானடியைச் சேர்ந்த தேங்காய் மோகன் என்ற ரவுடியும்
கைது செய்யப்பட்டான்.
இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் நந்தபாலன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவர் மீதும் குண்டர் தடைச் சட்டம் பாய்ந்துள்ளது.
இதற்கிடையில் போலீசார் தேடி வந்த ரவுடி அழகரின் நெருங்கிய கூட்டாளியான சஞ்சய் மதுரை 2வது ஜூடிசியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.