For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலிகள் மீதான தடையை நீக்க விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்

By Staff
Google Oneindia Tamil News

Tirumavalavan

சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை மத்திய அரசு உடனே நீக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னையில் இன்று நடந்த கருத்துரிமை மீட்புப் பேரணி மாநாட்டில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டில் சில இலங்கை தமிழ் எம்பிக்களும் பங்கேற்றனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

இலங்கை வாழ் தமிழர்களின் விடுதலைக்காகத் தான் போராடி வரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகச் சமுதாயம் ஜனநாயக இயக்கமாக அங்கீகரிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள இனவாதத்தின் கொடுமைக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வரும் தமிழர்களுக்கு ஒரே விடிவெள்ளி விடுதலைப் புலிகள் தான். எனவே அவர்கள் மீதான தடையை உலகச் சமுதாயம் நீக்க வேண்டும். மத்திய அரசும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன்,

புலிகளுக்காக குரல் கொடுக்கும் எனது போராட்டத்துக்கு மக்களின் ஆதரவு உள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19(1)ன் கீழ் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனது கருத்தைத் தெரிவிக்க முழுச் சுதந்திரம் உண்டு.

புலிகளுக்கும் தமிழ் ஈழத்துக்கும் எங்களது ஆதரவைத் தெரிவிக்கவே இந்தப் பேரணியும் மாநாடும் நடத்தப்பட்டது.

கடவுள் உண்டு என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருந்தால், இல்லை என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.

அதே போல தனி ஈழம் கூடாது என்று சொல்ல உரிமை இருந்தால், வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பல நாடுகள் தடை விதித்திருந்தாலும் அங்கு வாழும் தமிழர்கள் புலிகளுக்கு ஆதரவாக பேரணிகள் நடத்த அனுமதி தரப்படுவதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கனடாவில் அந் நாட்டு தேசிய கீதத்துடன் புலிகளின் கீதத்தையும் பாட அனுமதிக்கப்படுகிறது.

ஆனால், நம் நாட்டில் தான் நாம் நினைப்பதை பேச அனுமதி மறுக்கப்படுகிறது. கருத்து சொல்லக் கூட உரிமை இல்லை. இதுவும் தலித்களுக்கு எதிரான அடக்குமுறை தான்.

மறைந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கற் பா பாடியதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அவரை பாராட்டுகிறேன்.

புலிகளை காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அந்தக் கட்சியின் தலைவரான சோனியா காந்தி அம்மையார் தான் ராஜிவ் காந்தி கொலையில் குற்றவாளியான நளினிக்கு தூக்கு தண்டனை விதிப்பதை தவிர்க்கச் சொன்னார் என்றார் திருமாவளவன்.

மாநாடு நடந்த வளாகத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கட் அவுட் வைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் போலீஸார் அதை அனுமதிக்கவில்லை. பிரபாகரன் கட் அவுட் வைத்தால் பல பிரச்சினைகள் வரும் என்று எடுத்துக் கூறி அதைத் தடுத்து விட்டனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது சட்டசபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகளின் இந்த மாநாடு திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி சட்டசபையில் இதை பெரும் பிரச்சினையாகக் கூடும் என்பதால் திமுகவுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X