வேனில் பொருத்திய காஸ் சிலிண்டர் வெடித்து 4 பள்ளிக் குழந்தைகள் பலி
மும்பை: மும்பையில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் சென்ற வேனில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 4 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மும்பை புறநகர் பகுதியான ஒசிவாராவில் உள்ள மில்லட் நகரில் மில்லட் உயர்நிலைப்பள்ளி உள்ளது.
இன்று பிற்பகல் 1-20 மணிக்கு பள்ளி முடிந்ததும் பள்ளி வேனில் குழந்தைகளை வீடுகளில் இறக்கி விடுவதற்காக 11 குழந்தைகளை வேனில் ஏற்றியுள்ளார் வேன் டிரைவர்.
பின்னர் வேனை ஸ்டார்ட் செய்துள்ளார். அப்போது வேனில் இருந்த காஸ் சிலிண்டர் பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் வேனில் இருந்த 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மற்ற குழந்தைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் மேலும் ஒரு குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்தது.
வேனில் இருந்த குழந்தைகள் அனைவரும் 5 முதல் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வேன் டிரைவர் ரபீக் குரேஸியை கைது செய்தனர். இந்த வேன் மில்லட் பள்ளிக்கு ஒப்பந்த முறையில் இயக்கப்படுகிறது.
விபத்து குறித்து வேனின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications