சேது திட்டம்: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி-ஜெ.வுக்கு பெரும் பின்னடைவு!
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜரானார்.
அப்போது, தேசிய பாரம்பரியச் சின்னமாக ராமர் பாலத்ைத அறிவிக்க வேண்டும் என்று தொல்லியல் ஆய்வுத் துறையிடம் விண்ணப்பித்துள்ளீர்களா என்று ஜெயலலிதாவின் வக்கீலிடம் நீதிபதிகள் கேட்டனர். அதற்கு கே.கே.வேணுகோபால், அப்படி எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், யாருமே இதுவரை பார்த்திராத ஒரு பாலத்தை எப்படி தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முடியும் என்று கேட்டனர்.
இதையடுத்து அந்தக் கோரிக்கையைத் திரும்பப் பெறுவதாக கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் அனுமதித்தனர்.
தொடர்ந்து, சேது சமுத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அந்த திட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று மீண்டும் அதிரடியாக கேட்டனர். அதற்கு வேணுகோபால் சரியான பதிலைச் சொல்ல முடியாமல் தவித்தார்.
இதையடுத்து ஏற்கனவே இதுதொடர்பாக நிலுவையில் உள்ள பிற வழக்குகளோடு சேர்த்து இந்த வழக்கையும் விசாரிக்க உத்தரவிடுவதாக கூறி அடுத்த மாதம் 2வது வாரத்திற்கு விசாரணையைத் தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
ராமர் பாலத்தை தேசிய பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, திரும்பப் பெற்றுள்ளது ஜெயலலிதா தொடர்ந்த வழக்குக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.