கடலில் மிதக்கும் இலங்கை கண்ணிவெடிகள்: போலீஸ் எச்சரிக்கை
வேதாரண்யம்: இலங்கை கடற்படை கடலில் மிதக்கும் கண்ணிவெடிகளை வைத்துள்ளது குறித்து அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நடக்கும் சண்டை உக்கிரத்தை அடைந்துள்ளது. இதனால் இலங்கை கடற்படையினர் கடலில் மிதக்கும் கண்ணிவெடிகளை வைத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக காவல்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மீனவ கிராமங்களுக்கும் சென்று மீனவர்களிடேயை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக வேதாரண்யத்தில் போலீஸ் எஸ்பி சந்திரசேகரன் மீனவர்களிடையே பேசியதாவது, இலங்கையில் நிலவும் பதட்டமான சூழலால் இலங்கை ராணுவத்தினர் பல்வேறு கடல்பகுதியில் ரோந்து செல்கின்றனர்.
தற்போது இலங்கை நெடுந்திரு முதல் கச்சத்தீவு வரை இலங்கை கடற்படையினர் கண்ணிவெடிகளை அதிகளவில் வீசிச் சென்றுள்ளதாகவும், அவை கடலில் மிதப்பதாகவும் எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன.
அதனால் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் கடலில் மிதக்கும் சந்தேகத்துக்கிடமான எந்த பொருட்களையும் எடுக்க வேண்டாம். அவ்வாறு பொருட்கள் கிடைப்பதாக பார்த்தால் அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கண்ணிவெடிகள் வெடித்தால் படகுகள் சேதம் ஏற்படுவதுடன் உயிர் பலியும் ஏற்படும் என்பதால் போலீசார் நாகை, தூத்துக்குடி, வேதாரண்யம், ராமநாதபுரம் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் சென்று போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடலில் கண்ணிவெடிகளை மிதக்கச் செய்துள்ள இலங்கை அரசின் செயலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் இந்த விஷயத்தில் பெரும் மெளம் சாதித்து வருகின்றன.