காவிரி-முழு மின்சாரத்தையும் கேட்கும் கர்நாடகம்
சென்னை: காவிரியில் மின்சாரம் தயாரிப்பது தொடர்பாகவும் அதை பகிர்ந்து ெகாள்வது தொடர்பாகவும் தமிழகம்-கர்நாடகம் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது ஓகேனக்கல் நீர்மின் திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என்று உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அமைச்சர் ஆற்காடு வீராசாமி பதிலளிக்கையில்,
காவிரி ஆற்றில் கர்நாடகத்தில் சிவசமுத்திரத்தில் 270 மெகாவாட்டும், மேகதாதுவில் 400 மெகாவாடும், தமிழகத்தில் ஓகேனக்கக்கில் 120 மெகாவாட்டும், ராசிமணலில் 360 மெகாவாட்டுமாக மொத்தம் 1,150 மின்சாரம் தயாரிக்க முடியும்.
இதற்கான திட்டம் 1965ம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது. ஆனால், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் சிக்கல் நிலவுவதால் இந்தத் திட்டமும் இழுபறியாகவே உள்ளது.
1998ல் திமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். இது குறித்து தேசிய குழுவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. 3 முறை பேச்சுவார்த்தை நடந்தது. சமீபத்திய பேச்சுவார்த்தையில் நானும் கலந்து கொண்டேன்.
அப்போது 1,150 மெகாவாட் மின்சாரத்தை ஆளுக்குப் பாதியாக பகிர்ந்து கொள்ளலாம் என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக அரசு சார்பில் பங்கேற்றவர்கள் இதை ஏற்கவில்லை.
சிவசமுத்திரம், ஒகேனக்கல் ஆகிய இடங்களில் தயாராகும் 390 மெகாவாட் மின்சாரமும் தங்களுக்கே வேண்டும் என்றார்கள். எனவே இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அடுத்த மாதம் மீண்டும் கூடிப் பேச இருக்கிறோம். அப்போது நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறேன்.
இங்கு மின் நிலையங்கள் அமைக்கும் முழு செலவையும் மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். கர்நாடகத்தில் அதிக அளவில் மின் தட்டுப்பாடு உள்ளது என்றாலும் அந்த அரசு இந்த திட்டங்களை நிறைவேற்ற ஈடுபாடு இல்லாமல் உள்ளது.
காவிரி நதி நீர் பிரச்சனையை தீர்த்துவிட்டுத்தான் இதைச் செய்ய முடியும் என்கின்றனர் என்றார் ஆற்காடு.