இந்தோனேசியா: சுகர்தோ உடல் அடக்கம்
சிங்கப்பூர்: மறைந்த முன்னாள் இந்தோனேசிய அதிபர் ஹாஜி முகம்மது சுகர்தோவின் உடல் ஜாவா தீவில் உள்ள அவரது குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்தோனேசியாவை 32 ஆண்டு காலம் ஆட்சி புரிந்தவர் சுகர்தோ. உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த சுகர்தோ நேற்று மரணமடைந்தார். அவரது உடல் ஜாவா தீவில் உள்ள குடும்ப கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இந்தோனேசிய அதிபர் சுசிலோ பம்பாங் யுதோயனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் என்ற பெயர் சுகர்தோவுக்கு இருந்தாலும், இந்தோனேசியாவை இரும்புக் கரம் கொண்டு ஆட்சி புரிந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. கம்யூனிஸ்ட் கட்சியை ஒடுக்க அவர் மிகக் கடூரமாக நடந்து கொண்டார். 5 லட்சம் பேரை அவர் கொன்று குவித்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
1960களில் இந்தோனேசியாவின் நிறுவனரும், முதல் அதிபருமான சுகர்னோவிடமிருந்து ஆட்சியைப் பிடித்து அதிபரானவர் சுகர்தோ, அதன் பின்னர் 32 ஆண்டுகள் அவரது பிடியில்தான் இந்தோனேசியா இருந்தது.
ஆசிய நாடுகள் பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்தபோது 1998ம் ஆண்டு மே மாதம் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது.