பை ஏற்படுத்திய பரபரப்பு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள பிரவுசிங் சென்டரில், கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை டி.எச். சாலையில், இண்டர்நெட் மையம் நடத்தி வருபவர் மகேஷ் (வயது 26). நேற்றிரவு சுமார் 10.45 மணியளவில் மையத்தை மூட முற்பட்டபோது, கதவு அருகே ஒரு பை இருப்பதை பார்த்தார்.
அதில் ஏதோ இயந்திரம் இருப்பது போல அவருக்குத் தோன்றியது. இதனால் பயந்து போன அவர் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் செல்லமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பையை சோதனையிட்டார்.
அதில் தரையை சுத்தம் செய்யும் வேக்வம் கிளீனர் இருந்ததை கண்டதும் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மக்கள் கூடி விட்டனர். இந்தப் பையை யார் விட்டுச் சென்றது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.