கட்சி தாவல் 3 பகுஜன் சமாஜ் எம்.பி.க்கள் பதவி பறிப்பு

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 3 எம்.பி.க்களின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்களான பாலசந்திர யாதவ், ரமாகாந்த் யாதவ், முகமது ஷாகித் அக்லாக் ஆகிய மூவரும் கடந்த 2006ம் ஆண்டு அக்கட்சியிலிருந்து விலகி முலாயம் சிங் யாதவின் சமாஜ் வாடிக் கட்சிக்குத் தாவினர்.
இதையடுத்து கட்சித் தாவல் தடை சட்டப்படி, இந்த எம்.பி.க்களின் பதவியை பறிக்குமாறும், அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளை காலியிடங்களாக அறிவிக்குமாறும் பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற கடசித் தலைவர் ராஜேஷ்வர்மா, லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியிடம் மனு கொடுத்தார்.
அந்த மனுவை உரிமைக்குழு விசாரணைக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார். விசாரணைக்கு பின்னர் கிஷோர் சந்திரா தலைமையிலான உரிமைக்குழு, இந்த புகார் பற்றி விசாரணை நடத்தி சபாநாயகரிடம் அறிக்கை சமர்பித்தது.
அதன் அடிப்படையில் கடந்த மாதம் 10ம் தேதி சமாஜ்வாடி கட்சிக்கு தாவிய 3 எம்.பி.க்களிடமும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ராஜேஷ் வர்மா ஆகியோரிடம் தனித்தனியாக சோம்நாத் சட்டர்ஜி விசாரணை நடத்தினார்.
இதன் பின்னர் தற்போது 3 பேரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவிக்கையில், மனுதாரர் அளித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையிலும், 3 எம்.பி.க்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையிலும் பார்க்கும்போது, 3 எம்.பி.க்களும் தாங்களாகவே முன்வந்து பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி இருப்பதாகவே தெரிகிறது.
சமாஜ்வாடி கட்சியில் 3 எம்.பி.க்களும் சேர்ந்ததாக பத்திரிக்கைகளில் வெளியான செய்திக்கு 3 எம்.பி.க்களும் நியாயமான விளக்கம் அளிக்கத் தவறிவிட்டனர். அவர்களுக்கு எதிராக பத்திரிக்கைகள் சதி செய்வதாக கூற முடியாது.
எனவே கட்சித்தாவல் தடை சட்டப்படி 3 எம்.பிக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications