ரூ.76.32 கோடியில் செம்மொழி தமிழ் மையம்-மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: சென்னையில் ரூ. 76.32 கோடி மதிப்பீட்டில் மத்திய செம்மொழி தமிழ் மையத்தை நிறுவ மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மையத்தின் தலைவராக தமிழக முதல்வர் பொறுப்பு வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி கூறுகையில், சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவில் இந்த செம்மொழி தமிழ் மையம் நிறுவப்படவும். இதற்கான நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது.
இந்த மையத்திற்கு ரூ. 76.32 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதி நான்கு ஆண்டுகளுக்குள் செலவிடப்படும்.
இந்த மையத்திற்கான அனைத்து செலவுகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும்.
தமிழ் செம்மொழியைக் காக்கவும், அதன் வளர்ச்சிக்கான திட்டங்களைத் தீட்டவும் இந்த மையம் பாடுபடும் என்றார் முன்ஷி.