'அம்மா' சொன்னா கேக்கணும்-டி.ஆர்.பாலு மீது மதுசூதனன் பாய்ச்சல்
சென்னை: மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கூறியுள்ளார்.
அதிமுக அவைத் தலைவரான பின்னர் மதுசூதனன் இருந்த இடமே தெரியாமல் இருந்தது. இந் நிலையில் அவர் வெளியிட்டுள்ள திடீர் அறிக்கையில் கூறியுள்ளதாவது,
இந்திய கடற்படைத் தளபதி மேத்தா சேது சமுத்திரத் திட்டத்தின் பயன்பாடு பற்றிய தனது கருத்தை மிக அழகாக ஆணித்தரமாக வெளியிட்டுள்ளார். அதற்கு காரணம், கடலைப் பற்றியும் அதனைச் சார்ந்துள்ள சுற்றுப்புறச் சூழல் மற்றும் அமைப்புகள் பற்றியும், வந்து செல்லும் கப்பல்களை பற்றியும் இந்த சேது சமுத்திர திட்டத்தால் என்ன பலன் கிடைக்கும் என்றும் தெளிவாக அறிவுப்பூர்வமாக கருத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் சேது சமுத்திரத் திட்டத்தின்படி இந்தியா மற்றும் இலங்கைக்கு இடைப்பட்ட பாக்ஜலசந்தி பகுதியில் கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சாத்தியமானதுதான்.
ஆனால் இத்திட்டம் முடிவடைந்தாலும் அதன் வழியாக சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் பெரிய கப்பல்கள் செல்ல இயலாது. சிறிய கப்பல்கள் மட்டும் தான் செல்ல முடியும் என்று அழுத்தமாக சொன்னார். இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் எங்கள் தலைவி புரட்சித் தலைவி (ஜெயலலிதா) வினா எழுப்பினார்.
எங்கள் தலைவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாத டி.ஆர்.பாலு நாகரீகமற்ற முறையில் பிதற்றி இருக்கிறார். டி.ஆர்.பாலுவின் ஆத்திரத்துக்கு காரணமே, எந்த காரணத்திற்காக இந்த சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டதோ அது போன்று செயல்பட முடியாத சூழ்நிலை தான்.
இதன் வழியாக பெரிய கப்பல்கள் செல்ல முடியாது. சிறிய கப்பல்கள் தான் செல்ல முடியும் என எங்கள் அம்மா எந்தக் கருத்தை ஆதாரப்பூர்வமாகச் சொன்னாரோ, அதே கருத்தை கடற்படைத்தளபதி உறுதிபடுத்தியது டி.ஆர்.பாலுவுக்கு ஆத்திரத்தையும், ஆவேசத்தையும் உருவாக்கி இருக்கிறது.
அதனால் கடற்படைத் தளபதி மீறி சீறிப்பாய்ந்து, அவர் சொன்ன வார்தைகளைத் திரும்ப பெற வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் டி.ஆர்.பாலு.
சத்தியம், நேர்மை, தர்மத்தைக் காப்பாற்றுகின்ற அரசாக மத்திய அரசு இருந்தால், உண்மையை உரக்கச் சொன்ன கடற்படைத் தளபதியை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட டி.ஆர்.பாலுவை உடனடியாக மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications