சூரிய ஒளியில் மின்சாரம்-தமிழக அரசு தீவிரம்
சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்ட தடுக்க குறைந்த செலவில் சூரிய மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அவர் கூறியதாவது,
தற்போது மின்சாரம் தயாரிப்பதற்கான ஒரு காற்றாலை அமைப்பதற்கு ரூ.1.5 கோடியும் , 1 மெகாவாட் அனல் மின்சாரம் தயாரிக்க ரூ. 4 கோடியும் செலவாகிறது.
சூரிய ஒளி மூலம் 1 யூனிட் மின்சாரம் தயாரிப்பதற்கான கருவிகளை பொருத்த ரூ.25 கோடி செலவாகிறது. கருவிகளைப் பொருத்திவிட்டால் பின்னர் செலவு ஏதும் இல்லை.
ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் 1 யூனிட் மின்சார தயாரிப்புக்கு தேவையான கருவிகள் அமைக்க ரூ.12 கோடிதான் செல்விடுகிறார்கள். இந்த புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து வர நமது அதிகாரிகள் அங்கு சென்றுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
அவர்கள் சென்று வந்த பின் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கும்.
காற்றாலை அமைத்துள்ள தனியார்களிடம் ஏராளமான நிலம் உள்ளது. குறைந்த செலவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க வாய்ப்பு வரும்போது அவர்களும் அந்த கருவிகளை அமைக்க தயாராகவே உள்ளனர்.
சூரிய ஒளி மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்பட்டால் வருடத்தில் மழை பெய்யும் 25 நாட்கள் தவிர மற்ற நாட்களில் தட்டுப்பாடே இல்லாமல் மின்சாரம் பெற முடியும் என்றார் வீராசாமி.