மோடிக்கு வந்த இ-மெயில் மிரட்டல்: நிருபர்கள் வேடத்தில் கொல்ல சதி
பாஜக மூத்தத் தலைவர்கள் அத்வானி, ராஜ்நாத் சிங், வெங்கைய நாயுடு, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உட்பட பலரின் பெயர்கள் தீவிரவாதிகளின் ஹிட்-லிஸ்டில் உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் குஜராத் முதல்வரை சந்தித்து சிறப்புப் பேட்டி எடுக்க பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் விண்ணப்பித்திருந்தது. இந்தச் சூழ்நிலையில், அவருடைய இ-மெயில் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது.
அதில், உங்களிடம் சிறப்பு பேட்டி எடுப்பதற்காக பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் சங்கம் அனுமதி கேட்டுள்ளது. அப்போது நிருபர்கள் வேடத்தில் நாங்கள் வருவோம்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தின் மீது நாங்கள் நடத்திய தாக்குதலுக்கு 2 நாட்களுக்கு முன்னர் ஆப்கன் தலைவர் அகமது ஷா மசூத், பெல்ஜியத்தை சேர்ந்த வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது நிருபர்கள் வேடத்தில் நாங்கள் உள்ளே நுழைந்து மனித வெடிகுண்டாக மாறிக் கொன்றோம்.
அதேபோல் உங்களையும் கொல்வோம் என கூறப்பட்டுள்ளது.
இந்த இ-மெயில் எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே, பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோரை கொல்லும் பணி மும்பை தொடர் குண்டுவெடிப்பை நடத்திய தாவூத் இப்ராகிமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.