மதுரை நர்ஸ் மரணம்: சிபிசிஐடி விசாரணை

சென்னை: மதுரையில், மர்மமான முறையில் இறந்த நர்ஸ் கற்பகவள்ளியின் வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரித்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் மதுரை மாவட்டம், சித்தாழை கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரின் மகள் கற்பகவள்ளி, தனியார் ஒருவர் வீட்டில் நர்சாக பணியாற்றிய போது மர்மமான முறையில் இறந்தது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதன் மீது அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன், பாமக உறுப்பினர் வேல்முருகன், மார்க்சிஸ்ட் உறுப்பினர் நன்மாறன் ஆகியோர் பேசினார்கள்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், மதுரையைச் சேர்ந்த நாகேஷ் என்பவரின் வீட்டில் பணியாற்றிய அந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.
நாகேஷ் என்பவர் மதுரையைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் பெயரை குறிப்பிட்டு அவரது நண்பர் என்று தெரிவித்தார்.
இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த பெயரை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும் என்று ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதனை நீக்கக்கூடாது என்று அதிமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இதனால் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டு கூச்சல், குழப்பம் உருவானது.
அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, தேவையின்றி ஒருவரின் பெயரை சுட்டிக்காட்டுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்து அந்த பெயரை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், "நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. அவரது நண்பர் என்று தான் குறிப்பிட்டேன்' என்று தெரிவித்தார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன் இப்படி குறிப்பிடுவது மரபாகாது என்றார்.
அப்போது அமைச்சர் பரிதி இளம்வழுதி எழுந்து, தனக்கு கிடைத்த தகவல் என்று கூறி அதிமுகவைச் சேர்ந்த பெண் பிரமுகர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள். இதனால் அவையில் மீண்டும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இந்த சமயத்தில் அவை முன்னவரும், நிதியமைச்சருமான அன்பழகன் எழுந்து, ஒரு கிரிமினல் பிரச்சனை தொடர்பாக பேசும்போது குற்றச்சாட்டில் சம்பந்தபட்டவர்களைப் பற்றி பேச வேண்டுமே தவிர, அவருக்கு வேண்டியவர், தெரிந்தவர், நண்பர், உறவினர் என்றெல்லாம் பேசுவது முறையாகாது. அதனை அவைத்தலைவர் அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்ட பெயர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
அதன்பிறகு பேசிய முதலமைச்சர் கருணாநிதி, அதே வழிமுறையை பின்பற்றி பரிதி இளம்வழுதி குறிப்பிட்ட பெயரையும் நீக்க வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி அவர் சொன்ன பெயரும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், இளம்பெண் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார். இது கொலை என்றும் செய்தி வந்துள்ளது. எனவே, விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறினார்.
இதே கருத்தை ஞானசேகரன், வேல்முருகன், நன்மாறன் ஆகிய கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தினார்கள்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், மதுரை இளம்பெண் இறந்தது தொடர்பாக நாகேஷ் என்பவரின் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் காதல் தோல்வியால் தான் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாக தெரிய வந்துள்ளது. அவருடைய காதலர் துரைராஜ் என்பவர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications