செம்மொழி தமிழ் ஆய்வு மைய தலைவராக கருணாநிதி!
சென்னை: சென்னையில் அமையவுள்ள செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தலைவராக முதல்வர் கருணாநிதி செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் நிதியமைச்சர் அன்பழகன் ஒரு தீர்மானம் கொண்டு வந்து வாசித்தார். அதன் விவரம்:
கடந்த 150 ஆண்டுகளாக தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பரிதிமாற்கலைஞர் காலம் தொட்டு பல அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் புலவர்களும் , மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைந்த பிறகு முதல்வர் கருணாநிதியின் விடாமுயற்சி மற்றும் தோழமை கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழை செம்மொழியாக அறிவித்தார்.
2004ம் ஆண்டு குடியரசு தலைவர் உரையில் தமிழை செம்மொழியாக மத்திய அரசு அறிவிப்பு செய்தது. இந்த சூழலில் நேற்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னையில் 17 ஏக்கர் பரப்பளவில் ரூ.76.32 கோடி செலவில் செம்மொழி தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்றும் இதன் தலைவராக தமிழக முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிப்பார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை எடுத்த மத்திய அமைச்சரவைக்கும் பிரதமருக்கும் இவற்றுக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், மனித வளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங்குக்கும் இந்தப் பேரவை உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இதற்கெல்லாம் முதல் காரணமாக இருந்த முதல்வர் கருணாநிதிக்கும் இந்தப் பேரவை பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது. இதை அமைச்சர் அன்பழகன் படித்து முடித்தவுடன் திமுக கூட்டணி உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர். இதையடுத்து பல கட்சி உறுப்பினர்களும் பேசினர்.
இதையடுத்துப் பேசிய அமைச்சர் அன்பழகன், இந்த நிகழ்ச்சி மூலம் வரலாற்று சிறப்புமிக்க தமிழ் செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளாக வீழ்ந்து கிடந்த தமிழும் 1000 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தமிழ் சமூதாயமும் மீட்சி பெற வழி பிறந்திருக்கிறது. தமிழ் இனி வீழ்த்தப்படாது. தமிழ் மொழி, கலாச்சாரம், பண்பாடு மீட்கப்பட வழி பிறந்திருக்கிறது. மதத்தால் மொழி அடிமைப்பட்டுக் கிடந்ததில் இருந்து விடுபட பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
பெரியார், அண்ணா, மறைமலை அடிகள், பாரதி போன்றோர் தமிழ் ஏற்றமடைய வேண்டும் என்பதை சுட்டிக் காட்டினார்கள். தமிழ்நாட்டில் தமிழ் உயர் மொழியாக ஏற்கப்படலாம். ஆனால் அகில இந்திய அளவில் தமிழ் உயர் தனிச் செம்மொழியாக ஏற்கப்படுவதற்கு அரசியல் சூழ்நிலை தான் காரணம். கருணாநிதிக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்தது.
கடந்த ஆட்சியிலேயே பிரதமராக இருந்த வாஜ்பாயிடம் தமிழை செம்மொழியாக ஆக்க வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்தார். வாஜ்பாய் அதை ஏற்றுக் கொண்டாலும் அங்கிருந்த பலர் அதை ஏற்றுக் கொள்ளாததால் அப்போது அது நிறைவேறவில்லை. தற்போது மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி ஏற்பட்டதால் தமிழ் நாட்டுக்கு இந்த நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை.
சோனியா காந்தி சமய சார்பற்ற கொள்கை கொண்ட தலைவி, அதனால்தான் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சமய சார்பில் வீழ்ச்சி கண்ட தமிழை மீட்டிருக்கிறோம் என்றார்.
இதையடுத்து இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
விஜய்காந்த் மிஸ்ஸிங்:
முன்னதாக விருத்தாச்சலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் பட்ட மேற்படிப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டிருந்த கேள்விக்கு இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.
அவர் கூறுகையில், ஏற்கனவே இந்தக் கல்லூரியில் வணிகவியல், கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகியவற்றுக்கு மேல்பட்டப் படிப்புகள் உள்ளன. வேறு எந்த கோரிக்கையும் அந்தக் கல்லூரியில் இருந்து வரவில்லை என்றார்.
இதைத் தொடர்ந்து விஜயகாந்தை சபாநாயகர் பேச அழைத்தார். ஆனால் அவர் இருக்கையில் இல்லை.












Click it and Unblock the Notifications