2ம் வகுப்பு மாணவிக்கு ஸ்கேல் அடி-ஆசிரியர் மீது புகார்
சென்னை: சென்னை அருகே மாணவியை ஸ்கேலால் அடித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள பம்மல் முத்தமிழ் நகரைச் சேர்ந்த டேனியல்-ஸ்டெல்லா தம்பதியினரின் மகள் கிளாடிஸ் (6). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளியிலிருந்து திரும்பும்போது அழுது கொண்டே வந்துள்ளார் கிளாடிஸ். இதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவர் படிக்கும் வகுப்பு தோழிகளிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, ஆசிரியர் போர்டில் பாடம் எழுதிப்போடும் போது தாமதமாக எழுதியதால், அவர் ஸ்கேலால் கிளாடிஸை அடித்ததாக அவர்கள் கூறினர். இதையடுத்து டேணியலும், ஸ்டெல்லாவும் பள்ளி முதல்வரை சந்தித்து பேசினர்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து ஆசிரியர் மீது பல்லாவரம் காவல் நிலையத்தில் டேணியல் புகார் செய்தார்.
இதுகுறித்து போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி கிளாடிஸின் கையில் ரத்தம் கட்டியுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடமும் புகார் அளிக்க உள்ளதாக டேணியல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications