போன் ஒட்டு கேட்பு-பி.எஸ்.என்.எல்லுக்கு மதிமுக வழக்கறிஞர் நோட்டீஸ்
சென்னை: தன்னுடைய செல்போன் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் கூறி மதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப் படுவதாக சமீபத்தில் பிரச்சினை எழுந்தது. ஆனால் இதை சட்டசபையில் முதல்வர் கருணாநிதி மறுத்தார்.
இதற்கிடையில் மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு தனது செல்போன் ஒட்டு கேட்கப்படுவதாக புகார் கடிதம் எழுதியுள்ளார்.
மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவன பொது மேலாளருக்கு அவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், எனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தங்களது செல் ஒன் மொபைல் சேவையை பயன்படுத்தி வருகிறேன். ஒரு நாளேட்டில் வெளியான செய்தியின்படி எனது செல்போனும் ஒட்டு கேட்கப்படுவதாகத் தெரிகிறது.
எனக்கு தெரியாமலே எனது மொபைல் போன் பயன்பாட்டை ஒட்டு கேட்க உங்கள் நிறுவனம் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. ஒரு வாடிக்கையாளர் என்ற முறையில் சட்டப்படி வழங்க வேண்டிய சேவையை மீறி இருக்கிறீர்கள்.
அந்த அடிப்படையில் இதற்கு அனுமதி அளித்தீர்கள் என 10 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் இந்திய தொலை தொடர்பு சட்டத்தின் கீழ் சட்டம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் தமிழக தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளருக்கு ராதாகிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதத்தில், எனது மொபைல் போன் ஒட்டு கேட்கப்படுகிறது. இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எந்த அடிப்படையில் எனது தொலைபேசி உரையாடல் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பான அனைத்து விபரங்களையும் நீங்கள் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.