பெட்ரோல் விலை உயர்வு: இடதுசாரிகள் எச்சரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தால், அரசுக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என இடதுசாரிகள் மிரட்டியுள்ளன.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு உறுதியாக தீர்மானித்தால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான உறவு பலவீனமடையும். நாங்கள், மத்திய கூட்டணி அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும்.
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால் அதைக் கண்டித்து தேசிய அளவில் பெரும் போராட்டத்திலும் இடதுசாரிகள் ஈடுபடுவார்கள்.
விலையை உயர்த்துவதற்குப் பதில், வரி விகிதத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களின் தலையில் பளுவை ஏற்றாமல் தடுக்கலாம்.
பெட்ரோலியம் மற்றும் சுரங்கப் பிரிவில், வெளிநாட்டு நேரடி முதலீட்டை மத்திய அரசு ஏன் அனுமதிக்கிறது என்றே புரியவில்லை. இதனால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பலவீனமடையும் என்றார் ராஜா.