நரிக்குறவர்களிடம் ரூ. 30க்கு விற்கப்பட்ட சிறுமி!
சென்னை: சென்னையிலிருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு அங்கு நரிக்குறவர்களிடம் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட 3 வயது சிறுமியை போலீஸார் மீட்டனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் இப்ராகிம். இவரது தந்தை ஷாகுல் அமீது. இருவரும் பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து விட்டனர். என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள பிளாட்பாரத்தில் வசித்து வருகின்றனர்.
இருவரும் கடைகள், வீடுகளுக்கு சாம்பிராணி புகை காட்டி பிழைத்து வருகின்றனர். இப்ராகிமுக்கு சாம்பிராணி சாமியார் என்ற பெயரும் உண்டாம்.
இந்த நிைலயில் சமீபத்தில் மயிலாப்பூர், லாலா தோட்டம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகளுக்கு சாம்பிராணி புகை காட்டினார் இப்ராகிம். அப்போது சத்யா, காசி தம்பதியினரின் 3 வயது மகள் அனுசுயாவைப் பார்த்ததும் அவரைக் கடத்த முடிவு செய்தார்.
இதையடுத்து மீண்டும் லாலா தோட்டத்திற்கு வந்தார். அனுசுயா மட்டும் வீட்டில் இருப்பதைப் பார்த்த அவர் நைசாக பேசி தன்னுடன் அழைத்துச் சென்றார்.
பின்னர் குழந்தையை ஆந்திர மாநிலம் சூலூர்ப்பேட்டைக்கு அழைத்துச் சென்ற இப்ராகிம், அங்குள்ள ஒரு நரிக்குறவர்களிடம் அழைத்துப் போய், இவளை நான் ரயில் நிலையத்தில் வழி தவறி நின்றபோது பார்த்தேன். 30 ரூபாய் கொடுத்து இவளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
அவர்களும் 30 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். அனுசுயாவை வைத்து பிச்சை எடுக்க அவர்கள் திட்டமிட்டனர். பின்னர் நரிக்குறவர்களுடன் சேர்ந்து இப்ராகிம் மது அருந்தியுள்ளார். மது போதையில் நரிக்குறவர்கள் மயங்கியிருந்த நேரம் பார்த்து அவர்கள் வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.
சென்னைக்கு வந்த அவர் மறுபடியும் லாலா தோட்டம் சென்றார். அனுசுயாவைக் காணாமல் தவித்துக் கொண்டிருந்த அவளது பெற்றோரிடம், உங்களது மகளை சில நரிக்குறவர்களுடன் சூலூர்ப்பேட்டையில் பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் மகள் காணாமல் போனது குறித்து புகார் கொடுத்திருந்த சத்யா, காசி தம்பதியினர், இப்ராகிம் கூறியதை போலீஸாரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக போலீஸார் சூலூர்ப்பேட்டை விரைந்தனர். அங்கு நரிக்குறவர்களிடம் விசாரித்ததில், குட்டு வெளிப்பட்டது. இதையடுத்து இப்ராகிமை போலீஸார் கைது செய்தனர்.
இப்ராகிம் ஏற்கனவே 2001ம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் ேசர்ந்த ஒரு சிறுவனை இப்படித்தான் கடத்தி விற்றுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.