சேது: ராமர் பாலம் குறித்து அகழ்வாராய்ச்சி; மத்திய அரசு முடிவு

ராமர் பாலத்தை வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிவிட்டதோடு, மத்திய அரசுக்கும் பெரும் தலைவலி தந்து வருகிறது பாஜக. இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைக்கு வட மாநிலங்களில் ஆதரவு அதிகரித்து வருவதால் சேது திட்டத்தில் எந்த அவசர முடிவையும் எடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தயாராக இல்லை.
இந் நிலையில் சேது திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு.
திட்டத்தை நிறைவேற்றிய ஆக வேண்டும் என ஒரு பக்கம் திமுக நெருக்கி வருவதால் என்ன பதில் தாக்கல் செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போயுள்ளது மத்திய அரசு. ஆனால், அடுத்த மாதம் பதில் மனு தாக்கல் செய்தே ஆக வேண்டிய நிலை.
இந் நிலையில் ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா என்பது குறித்து அகழ்வராய்ச்சி நடத்தி முடிவெடுப்பதாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தயாராகி வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில் இத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரமாக இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்படுமாம் (இது திமுகவை தாஜா செய்ய).
இந்த பதில் மனுவுக்கு கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் திமுக தலைமையையும் ஒப்புக் கொள்ள வைக்கும் வேலையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆனால், இந்த அகவ்வாராய்ச்சிப் பணி என்பது பல ஆண்டுகள் பிடிக்கும் வேலை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்துக்கு பெரிய பிரேக் விழலாம்.
விரைவில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸ் ராமர் பால விவகாரத்தில் பாஜகவிடம் சிக்கிக் கொள்ள தயாராக இல்லை.












Click it and Unblock the Notifications