பொறியியல் கல்லூரி ஆசிரியர்களுக்கும் உடை கட்டுப்பாடு
சென்னை: பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் ஆடை கட்டுப்பாடு கொண்டு வரப்படவுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மிக நேர்த்தியாக பேண்ட், சட்டை அணிந்து வரவேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் சில தனியார் கல்லூரிகளில் சில ஆசிரியர்கள் டி-சர்ட் அணிந்து வருவதாகவும் ஜீன்ஸ் பேண்ட்ஸ் அணிந்து வருவதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இதைத்தொடர்ந்து அண்ணாபல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். அதில் ஆசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு மிக அவசியம் என்றும் அதை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்படும்.
ஆசிரியர்கள் ஜீன்ஸ்-டி சர்ட் அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டையும் அணியக் கூடாது. பேண்ட், முழுக் கை சட்டை தான் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்படும்.
ஆசிரியைகள் சேலை அல்லது அல்லது சல்வார் கமீஸ் அணிந்து வரலாம்.
ஆசிரியர்களின் ஆடை கட்டுப்பாட்டையும், மாணவர்களின் ஆடைக் கட்டுப்பாட்டையும், செல்போன் தடையையும் கண்காணிக்க வேண்டியது ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த துறையின் தலைவரின் பொறுப்பாகும்.
மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் உள்ள ஒவ்வொரு துறைத் தலைவர்களின் கூட்டம் மற்றும் கல்லூரி முதல்வர்கள் கூட்டம் ஆகியவற்றை நடத்த உள்ளோம்.
ஆசிரியர்கள் பாடம் நடத்தும் ஒரு வாரத்திற்கு முன்பே என்ன பாடம் நடத்தப்போகிறோம் என்பதை துறை தலைவர்களிடமும், மாணவர்களிடமும் தெரிவிக்க வேண்டும். ஏனெனில் மிக முக்கிய பாடம் என்றால் மாணவர்கள் அன்று விடுமுறை எடுக்க மாட்டார்கள்.
லேப்டாப் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கல்லூரிகளில் இருக்க வேண்டும். அதை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். ஆங்கில பேச்சாற்றலை வளர்க்கும் பிரிவுகள் நன்றாக செயல்படவேண்டும். மாணவர்களும் ஈடுபாடு கொண்டு ஆங்கில பேச்சாற்றலை கற்க வேண்டும் என்றார் விஸ்வநாதன்.
மாணவர், மாணவிகளுக்கு உடை-செல்போன் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து அதை திறம்பட அமலாக்கியும் வருபவர் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டுப்பாட்டால் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளாதாகவும் விஸ்வநாதன் கூறுகிறார்.