For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

''நான் நேற்று மாலை வள்ளுவர் கோட்டம் வழியாக சென்றேன்''.. ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய மின்சாரத்தை வீணடித்து தமிழகத்தை இருளில் மூழ்கடிக்க முயலும் கருணாநிதியின் அடாவடி செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை வள்ளுவர் கோட்டம் வழியாக சென்றேன். அப்போது வள்ளுவர் கோட்டம் முழுவதும் அலங்கார மின் விளக்குகளால் ஜோடிக்கப்பட்டிருந்ததுடன், அதன் எதிர்புறங்களிலும், தொடர்பே இல்லாமல் சீரியல் பல்புகளும், அலங்கார மின் விளக்குகளும் ஜொலித்துக் கொண்டிருந்தன.

என்ன விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கேட்டேன். அதற்கு இன்று எந்த விழாவும் நடைபெறவில்லை என்று பதில் கிடைத்தது.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது, தை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டு தினமாக மாற்றியதற்காக முதல்வருக்கு சங்கத் தமிழ் பேரவை எடுக்கும் நன்றி பாராட்டு விழா நடைபெற உள்ளது என்றும், அந்த விழா 9ம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதை முன்னிட்டே இந்த அலங்கார விளக்குகள் இப்போதிருந்தே ஒளிர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்தது.

நான் இந்த காட்சியை பார்த்தது 6ம் தேதி மாலை. விழா நடைபெறுவதாக சொல்லப்படுவதோ 9ம் தேதி. விழாவுக்கு 4 நாட்கள் இருக்கின்ற நிலையில் இப்போதிருந்தே ஏன் சர மின்விளக்குகள் கட்டப்பட்டிருக்கின்றன என்பது தெரியவில்லை.

நான் இந்த காட்சியை பார்த்தது 6ம் தேதி தான். ஆனால் இதர்கு முன் எத்தனை நாட்களாக இந்த விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது என்பது தெரியவில்லை.

விழா நடக்கும் அன்று அலங்கார மின் விளக்குகள் வைப்பது என்பது நடைமுறை. ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே மின் விளக்குகள் எரிவது என்பது தேவையற்ற வீண் செலவு என்பது மட்டுமல்ல. மின்சாரத்தை வீணடித்து மக்களுக்கு வேதனை தருவதாகவும் இருக்கிறது.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் அன்றாடம் தமிழகம் இருளில் ஆழ்த்தப்பட்டு வருகிறது. மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரம் பல இடங்களுக்கு வழங்கப்படுவதே இல்லை. தேர்வுக்கு படிக்கின்ற மாணவ, மாணவியர்கள் உட்பட சமூகத்தின் பல தரப்பினரும் கடுமையான மின்வெட்டால் பல சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள்.

சிறு தொழில்களும் மின்சார பற்றாக்குறையால் சீரழிந்து வருகின்றன. விவசாய பம்புசெட்டுகளுக்கு தேவையான மின்சாரம் கிடைப்பதில்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் படும் அவதிக்கு அளவே கிடையாது.

தமிழகமே இருளில் மூழ்கி கிடக்கின்ற இந்த சூழ்நிலையில், தனி மனிதனின் ஆடம்பரத்திற்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு, இன்றியமையாத மின்சாரமும், மக்களுடைய வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய மின்சாரத்தை வீணடித்து தமிழகத்தை மேலும் இருளில் மூழ்கடிக்க முனையும் கருணாநிதியின் இத்தகைய அடாவடி செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இந்த ஆடம்பர மின் விளக்குகளுக்கான வீண் செலவை மின்சார வாரியத்திற்கு திமுக தலைமை கொடுக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X