நேபாளத்திலிருந்து கடத்தி வந்து சென்னையில் சிறுநீரகம் திருட்டு: 12 பேர் கைது
சென்னை: நேபாளத்தில் இருந்து ஆட்களை கடத்தி வந்து சென்னையில் சிறுநீரகங்களை திருடிய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் நடந்த மிகப் பெரிய சிறுநீரக மோசடி குறித்த தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை டாக்டர் பழனி ஜி.ரவிச்சந்திரன் மும்பையில் கைது செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பு சற்றே அடங்கிய நிலையில் டெல்லி அருகே குர்கானில் மிகப் பெரிய அளவு நடந்த சிறுநீரக மோசடி குறித்த தகவல்கள் வெளியாகி நாட்டையே உலுக்கியுள்ளது.
மும்பை மற்றும் டெல்லி அருகே நடந்த மோசடியில் சென்னையை சேர்ந்த டாக்டர்களுக்கும், பிரபல மருத்துவமனைகளுக்கும் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் நேபாளத்தில் இருந்து மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி, சிறுநீரகங்களை மோசடியாக திருடிய 12 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பலுக்கு தலைவராக செயல்பட்டு வந்த தீபக் லாமா என்பவர் தலைமறைவாகி விட்டார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நேபாளத்தில் மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்த ஏழை மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களில் பெரும்பாலனவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பிரபல மருத்துவமனைகளில் வைத்து சிறுநீரகம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு சென்னையில் உள்ள டாக்டர்களும், மருத்துவமனைகளும் உடந்தையாக இருப்பது தெரிய வந்துள்ளதால் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணை நடத்த நேபாள போலீசார் சென்னைக்கு வருவார்கள் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications