ரயில் பயணிகளுக்கு உதவும் 99625 00500
சென்னை: ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது பயணிகளுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே உதவிக்கு அழைக்க புதிய டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநில அரசின் ரயில்வே பாதுகாப்புப் படை, தெற்கு ரயில்வே, வோடோபோன் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக 9962500500 என்ற எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடு அறை சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், உடனே இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் சொன்னால் உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்து, அந்த ரயிலில் பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், கார்ட் மற்றும் அடுத்த ரயில் நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தரப்படும்.
இதன் மூலம் அடுத்த சில நிமிடங்களில் பயணிக்கு ரயில்வே போலீசாரின் உதவி கிடைக்கும். இந்த வசதி 65 எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் சென்னை மின்சார ரயில்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் அறிமுகமான இந்த சேவை பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது குறித்து ரயில்வே ஐ.ஜி.மாகாளி கூறியதாவது,
இதுவரை ரயில் பயணிகளுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக 37 அழைப்புகளும், மருத்துவ உதவி கேட்டு 14 அழைப்புகளும், திருட்டு தொடர்பாக 16 அழைப்புகளும் வந்துள்ளன.
தனியாக பயணம் செய்த பெண்ணை ஈவ்டீசிங் செய்வதாக புகார் வந்ததை அடுத்து ஒரு வாலிபரை கைது செய்துள்ளோம். இந்த வசதி செய்யப்பட்ட பிறகு உதவி தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக உதவி செய்வதுடன் உரிய பாதுகாப்பும் வழங்க முடிகிறது என்றார்.
சமீபத்தில் ஓடும் ரயிலில் ஒரு பயணிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுவிட, இந்த எண்ணை தொடர்பு கொண்டார் சக பயணி. அடுத்த ஸ்டேசனில் ஆம்புலன்ஸை தயார் நிலையில் வைத்து அவரை காப்பாற்றியுள்ளனர் இந்த கண்ட்ரோல் ரூம் பிரிவினர்.












Click it and Unblock the Notifications