சான்றிதழ் கிடைக்காமல் தவிக்கும் பிஎட் மாணவர்கள்
தென்காசி: தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 9 மாதங்கள் கடந்தும் சான்றிதழ் கிடைக்காததால், தென்காசி பிஎட் கல்லூரி மாணவர்கள் நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் மனு அளித்தனர்.
தென்காசி அருகே நல்லமணி யாதவ் பிஎட் கல்லூரி உள்ளது. இந்த நிர்வாகத்தின் சார்பில் கலைக்கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனமும் ஒரே வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2005-06ம் கல்வி ஆண்டில் துவக்கப்பட்ட பிஎட் கல்லூரிக்கு நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் இணைப்பு கேட்டு விண்ணபித்தது. பல்வேறு காரணங்களால் இணைப்பு கிடைக்காமல் போனது.
இதையடுத்து அந்த ஆண்டு கல்லூரியைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கல்லூரி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு நவம்பரில் 100 மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூலையில் வெளியிடபட்டது. ஆனால் இதுவரை அவர்களுக்கு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட 100 மாணவர்களும் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சான்றிதழ் கிடைக்காத 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்கலைக்கழக துணைவேந்தர் சிந்தியா பாண்டியனை சந்தித்து மனு அளித்தனர்.
இதனை பெற்றுக் கொண்ட அவர் கல்லூரி தொடர்பான வழக்கு நடந்து வருவதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று தெரிவித்து விட்டார்.