ஒசூர் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்-2 பேர் பலி
ராயக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரையடுத்த உத்தனப்பள்ளி அருகே துப்புகானபள்ளி என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டிய கிராமப் பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 15 காட்டு யானைகள் புகுந்தன.
இதையடுத்து யானைக் கூட்டத்தை விரட்டும் முயற்சிகளில் கிராம மக்கள் ஈடுபட்டனர். வெடிகள் போட்டும், தீ வைத்தும், முரசுகளை ஒலித்தும் யானைகள் மக்கள் விரட்ட முயன்றனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு யானை மட்டும் பிரிந்து சென்று பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தின் அருகே போய் பதுங்கியது.
யானை நிற்பது தெரியாமல் அந்த வழியாக வந்த பாபுசிங் (வயது 45) என்பவரை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து மற்ற யானைகள் 2 பிரிவுகளாகப் பிரிந்து சென்றன. புளியமரக்கல் என்ற இடத்தில் சென்ற ஒரு யானைக் கூட்டம் அந்த வழியாக வந்த பசப்பா (வயது 65) என்பவரை தூக்கி போட்டு மிதித்தன. இதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
மேலும் முனிராஜ் (வயது 35) என்பவரையும் யானைகள் தாக்கின. இதில் அவரும் படுகாயமடைந்தார்.
யானைகள் அட்டகாசம் செய்ததை படம் பிடித்த ரமேஷ் என்ற போட்டோகிராபரும் தப்பவில்லை. அவரையும் யானைகள் தூக்கி வீசின. படுகாயடைந்த அவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பல மணி நேரம் அட்டகாசம் செய்த யானைகளில் 8 யானைகள் காட்டுக்கு திரும்பிவிட்டன. ஆனால், மேலும் 7 யானைகள் கனிஜூர் மலைப் பகுதியில் சுற்றி வருகின்றன. இவை மேலும் பலரையும் தாக்கின. வெங்கட்ராமனப்பா என்பவரை இந்த யானைகள் தாக்கியதில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற தொட்டையா என்பவரை யானைகள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
இந்த யானைகள் விரட்டியடிக்க வனத்துறையினரும் காவல்துறையினரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications