வட இந்தியர்களைக் குறைத்துப் பேசியதாக சர்ச்சையில் டெல்லி ஆளுநர்
டெல்லி: தென்னிந்தியர்கள்தான் சட்டம் ஒழுங்குக்கு மரியாதை கொடுப்பவர்கள், மதித்து நடப்பவர்கள். வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதை மீறுவதை பெருமையாக கருதுபவர்கள் என டெல்லி ஆளுநர் தேஜிந்தர் கண்ணா பேசியிருப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு தேஜிந்தர் கண்ணா ஒரு சர்ச்சையில் சிக்கினார். டெல்லியில் வசிப்பவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உத்தரவிட்டார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எதிர்ப்பும் கிளம்பியது.
இதையடுத்து தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்தார் கண்ணா. இதைத் தொடர்ந்து அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் கண்ணா. இம்முறை வட இந்தியர்கள் குறித்து அவர் தெரிவித்த கருத்து புயலைக் கிளப்பியுள்ளது.
டெல்லியில் நடந்த போக்குவரத்துக் காவல்துறை விழாவில் பங்கேற்ற கண்ணா அங்கு பேசுகையில், தென்னிந்தியாவில் போக்குவரத்து விதிகளையும், சட்டங்களையும் மதிப்பவர்கள் அதிகம். ஆனால் இப்பிராந்தியத்தில் சட்டங்களை மீறுவதை பெருமையாக கருதுகிறார்கள்.
தென்னிந்தியர்கள் சட்டத்தை மதித்து நடக்கிறார்கள். ஆனால் வடக்கு மற்றும் மேற்குப் பகுதி இந்தியர்களோ சட்டத்தை மீறுவதை பெரிய விஷயமாக கருதுகிறார்கள். தங்கள் மீது யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.
டெல்லியில் வசிப்பவர்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். சட்டத்தை மீறக் கூடாது. இந்த அச்ச உணர்வை அவர்களிடம் ஏற்படுத்த ஆளுநர் என்ற முறையில் உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றார் கண்ணா.
கண்ணாவின் பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வட இந்தியர்களை கண்ணா குறைத்துப் பேசியுள்ளார் என்று குரல்கள் எழுந்துள்ளன.
முதல் குரலாக மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாரு கருத்து தெரிவித்தது தவறானது என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளரான ராஜீவ் பிரதாப் ரூடியும், இது விவேகமற்ற பேச்சு. இதற்காக கண்ணா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
உ.பி. முதல்வர் மாயாவதி, கண்ணா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே, இந்த சர்ச்சை குறித்து மத்திய அமைச்சர் பி.ஆர். தாஸ் முன்ஷி கருத்து தெரிவிக்கையில், ஆளுநர் தவறாகப் பேசியிருப்பது உண்மையானால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தனது பேச்சை தேவையில்லாமல் சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டுள்ளதாக ஆளுநர் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிப்பதில் டெல்லியை, தென் மாநிலங்களோடு ஒப்பிட்டு சில கருத்துக்களைக் கூறினேன். ஆனால் இதை உள்நோக்கத்தோடு சில மீடியாக்கள் திரித்து வெளியிட்டுள்ளன. இது தவறான போக்காகும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications