'வளர்ப்பு மகன்..மறந்து போச்சா': ஆற்காடு வீராசாமி

தை முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு பிப்ரவரி 9ம் தேதி(நாளை) வள்ளுவர் கோட்டத்தில் தமிழ் சங்கப் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது. இதற்காக 4 தினங்களுக்கு முன்பே அலங்கார விளக்குகள் எரிவதாகவும், இவ்வாறு மின்சாரத்தை வீணடிப்பது வேதனை தருவதாகவும் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இந்த ஆடம்பர மின் விளக்குகளுக்கான செலவை மின்சார வாரியத்துக்கு திமுக தலைமை கொடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இதற்கு ஆற்காடு வீராசமி அளித்துள்ள பதில்:
தன்னுடைய சொந்த மகனுக்காக கூட அல்ல, தன்னுடைய வளர்ப்பு மகன் என்று குறிப்பிட்டு அவருக்கு திருமணம் நடத்துவதாக அறிவித்து, அது திருமணமா அல்லது மாநாடா என்று தெரியாத அளவிற்கு சென்னை மாநகரத்திற்குள் உள்ள அத்தனை தெருக்களிலும் விளக்குகள் போடப்பட்டன. கட்-அவுட்கள் வைக்கப்பட்டு, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
திருமணத்தையொட்டி மாப்பிள்ளை அழைப்பு விழா. அந்த விழாவில் முதல்வரும், அவருடைய தோழியும் அலங்கார பொம்மைகளாக பல கிலோ நகைகளை உடம்பிலே பூட்டிக் கொண்டு காவல் துறையின் மூத்த அதிகாரிகள் சுற்றிலும் அணிவகுக்க, யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் எல்லாம் பவனி வந்தது ஜெயலலிதாவுக்கு மறந்து போய்விட்டதா. பின்னர் அந்த வளர்ப்பு மகன் மீதே வழக்கு போட்டதால், அதற்கு முந்தைய நிகழ்ச்சிகள் அனைத்தும் மறைந்து விட்டதா.
திருமணப் பந்தல் மாநாட்டு பந்தலை போல அலங்கரிக்கப்படவில்லையா. திருமணம் நடைபெறுகின்ற நாளுக்கு 15 நாட்களுக்கு முன்னர் அலங்கார விளக்குகள் போடப்பட்டு அதனை பத்திரிக்கை எல்லாம் படமெடுத்து வெளியிடவில்லையா.
ஏன் ஜெயலலிதா ஒரு மாவட்டத்திற்கு ஒரு அரசு விழாவிலே கலந்து கொள்ளச் செல்கிறார் என்றால் அந்த நகரமே அலங்காரப்படுத்தப்பட்ட வரலாறுகள் கிடையாதா.
நகரம் முழுவதற்கும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டு, அழகுபடுத்தப்படும். 30 நிமிடம் நடைபெறும் விழாவிற்காக 10 நாட்களுக்கு முன்பே விழா ஏற்பாடுகள் நடைபெறும்.
ஜெயலலிதா ஒரு விழாவில் கலந்து கொள்கிறார் என்றால் அந்த விழா மேடையில் கழிப்பிடம் கட்டுவதற்காக மட்டுமே லட்சக்கணக்கான ரூபாய் செலவழிக்கப்பட்டு அதுபற்றி அரசாணைகள் வெளியிடப்பட்டதை எல்லாம் பலமுறை எடுத்துக்காட்டப்பட்டு இருக்கிறதே. அதையெல்லாம் மறந்து போய்விட்டனரா.
தற்போது நடைபெறுவது அரசாங்க விழா அல்ல. அரசு சார்பில் ஒரு சல்லிக்காசு கூட செலவழிக்கப்படும் விழாவும் அல்ல. தனிப்பட்ட ஒரு அமைப்பின் சார்பில் தமிழ் புத்தாண்டு தைத் திங்கள் முதல் நாள் என அறிவித்து, அதற்கான சட்டத்தையும் பிறப்பித்த முதல்வருக்கு தமிழர்கள் சார்பில் நடத்தப்படும் பெருவிழா. அந்த விழாவில் சான்றோர்களும், ஆன்றோர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
அந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்யும்போது, விளக்குகள் போடப்படுவதை, ஜெயலலிதா பார்த்துவிட்டு, அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், 4 நாட்களுக்கு முன்பே விளக்கு போடலாமா என்று கேட்பது வயிற்று எரிச்சலின் வெளிப்பாடே ஆகும்.
மின் அலங்காரம் செய்வோர் அந்த விளக்குகள் எரிகிறதா என்று சோதனை செய்து பார்க்கும் நேரத்தில் அதனை பார்த்துவிட்டு 4 நாட்களுக்கு முன்பே விளக்குகளை அலங்காரம் செய்யலாமா என ஜெயலலிதா கூறுகிறார்.
மக்களின் வரிப்பணம் எல்லாம் எப்படி வீணாகின்றது என அங்கலாய்க்கிறார். மக்களின் வரிப்பணமோ, அரசுப் பணமோ இந்த விழாவுக்காக எந்த வகையிலும் செலவழிக்கப்படவில்லை.
இந்த விழாவிலே கலந்து கொள்ளக் கூட முதல்வர் கருணாநிதி முதலில் ஒப்புதல் தரவில்லை. ஆனால் தமிழ் மக்கள் சார்பில் எடுக்கப்படும் இந்த விழாவிற்கு அறிக்கை மூலம் எதிர்ப்பு காட்ட இயலும் ஜெயலலிதாவின் அறிக்கை கருணாநிதிக்கு தரப்படும் பாராட்டினை கண்டு வெறுக்காமல், அய்யோ இந்த அளவிற்கு பாராட்டா. எப்படி தாங்கிக் கொள்வேன் என்ற எண்ணத்தோடு வெளியிடப்பட்டுள்ள ஒன்றே தவிர வேறல்ல என்று தான் எண்ணிக்கொள்ள வேண்டும் என ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications