பயணிகளை பாதி வழியில் இறக்கிவிட்ட பாரமவுன்ட் ஏர்வேஸ்
சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த பாஜக மூத்தத் தலைவர் வெங்கைய நாயுடு உள்ளிட்ட அனைத்து பயணிகளையும் சென்னையிலேயே இறக்கிவிட்டு பாரமவுன்ட் ஏர்வேஸ் நிறுவனம் தவிக்கவிட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத்திற்கு செல்லும் பாரமவுன்ட் ஏர்வேஸ் நேற்றிரவு 8 மணிக்கு சென்னை வந்தது. சென்னையில் இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியவுடன் பயணம் தொடரும் என வெங்கைய நாயுடு உட்பட அனைத்து பயணிகளும் அமர்ந்திருந்தனர்.
திடீரென்று விமான ஊழியர்கள் அனைவரையும் கீழே இறங்குமாறு கூறினர்.
என்னவென்று விசாரித்ததில், விமானிக்கு பணி நேரம் முடிந்து விட்டதால் இந்த விமானம் ஹைதராபாத் செல்லாது என தெரிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விமான நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி கூறுகையில், போதுமான பயணிகள் இல்லாததால் விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டது என்றார்.
விமான நிறுவன ஊழியர்களின் அலட்சியமான பதிலுக்கு வெங்கைய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதன் பின்னர் வெங்கைய நாயுடு உட்பட ஹைதராபாத் செல்லவேண்டிய அனைவரும் வேறொரு விமானம் மூலம் இரவு 9 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications