பஹ்ரைனில் இந்தியர்களின் குறைந்தபட்ச ஊதியமாக 100 தினார் நிர்ணயம்
துபாய்: பஹ்ரைன் நாட்டில் பணியமர்த்தப்படும் இந்தியத் தொழிலாளர்களுக்கு (அன் ஸ்கில்டு தொழிலாளர்கள்) குறைந்தபட்சமாக 100 தினார் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் புதிய விதிமுறை மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறையும் என்ற கவலை எழுந்துள்ளது.
வளைகுடா நாடுகளில் உள்ள வாழிடச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி பஹ்ரைனில் குறைந்தபட்ச ஊதியமாக 100 தினார்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒவ்வொரு வளைகுடநா நாட்டுக்கும் ஒரு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அறிவு சாரா தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை வளைகுடா நிறுவனங்கள் வழங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மார்ச் 1ம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. அதன் மார்ச் 1ம் தேதி முதல் இந்தப் புதிய விதிமுறைக்கு உடன்பட்டு வழங்கப்படும் காண்டிராக்டுகளுக்கு மட்டுமே இந்தியத் தூதரகம் அத்தாட்சி வழங்கும். இந்த அத்தாட்சி பெறாத தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இந்தப் புதிய திட்டத்தால் இந்தியத் தொழிலாளர்களுக்குப் பெரும் பாதகம் ஏற்படும் என அச்சம் எழுந்துள்ளது. இந்தியத் தொழிலாளர்களை விட்டு விட்டு குறைந்த ஊதியத்திற்கு வேலை பார்க்கத் தயாராக இருக்கும் வங்கதேசம், நேபாள நாட்டுத் தொழிலாளர்கள் பக்கம் வளைகுடா நாடுகள் கவனத்தை திருப்பக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அதேசமயம், மத்திய அரசின் இந்தத் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும், அவர்களை ஏமாற்றுவது குறையும் என பஹ்ரைனுக்கான இந்தியத் தூதர் பாலகிருஷ்ண ஷெட்டி கூறியுள்ளார்.
ஏற்கனவே பஹ்ரைனில் வேலை பார்த்தும் இந்தியாவைச் சேர்ந்த வீட்டு வேலை பார்க்கும் பெண்களுக்கு இந்த குறைந்தபட்ச ஊதிய முறை கடந்த அக்டோபர் முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.