சமூக சேவகர் பாபா ஆம்தே மரணம்

தொழு நோயாளிகள் நலனுக்காக, மறுவாழ்வுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தவர் ஆம்தே.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த ஆம்தேயின் முழுப் பெயர் முரளீதர் தேவிதாஸ் ஆம்தே. வழக்கறிஞரான இவர் இளமை பருவத்திலேயே சமூகத் தொண்டில் ஆர்வம் கொண்டார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றார்.
மிக வசதியான பிராமண குடும்பத்தில் பிறந்த ஆம்தே நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து முடித்தவுடனேயே ஏழை மக்களுக்காக வழக்குகளில் இலவசமாக வாதாட ஆரம்பித்தார்.
தொழுநோயாளிகள் படும் இன்னல்கள் கண்டு கலங்கிய ஆம்தே அவர்களுக்காக மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூரில் ஆசிரமம் அமைத்தார். அவரை தொழுநோயாளிகள் பாபா ஆம்தே என அன்புடன் அழைக்க ஆரம்பித்தனர்.
ஆசிரமத்தில் தொழு நோயாளிகளுக்காக இலவசமாக மருத்துவமனையையும் அமைத்து அவர்களுக்கு முழு நேரமும் சேவை செய்து வந்தார்.
கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த தொடர்ந்து ஏழைகள், ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபட்டு வந்தார். இந் நிலையில் இன்று அதிகாலை ஆசிரமத்திலேயே இயற்கை எய்தினார்.
இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். உலக அளவில் பல விருதுகளை வென்றவர் பாபா என்பது குறிப்பிடத்தக்கது.
கிராம வளர்ச்சிக்கு எதிரான, வெறும் தொழில்துறைகள் சார்ந்த வளர்ச்சியை கடுமையாக எதிர்த்தவர் பாபா. குஜராத்தின் சர்தார் சரோவர் அணைத் திட்டம் உள்ளிட்ட இயற்கையை சீர்குலைக்கும் திட்டங்களை கடுமையாக எதிர்த்தவர் ஆம்தே.
அவரது மறைவு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பெரும் இழப்பாகும்.












Click it and Unblock the Notifications