இலங்கையிலிருந்து மீண்டும் அகதிகள் வருகை - 10 பேர் வந்தனர்
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 10 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதனால் இலங்கையிலிருந்து தமிழர்கள் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் அகதிகளாக விமானம் மூலம் சென்னை வந்தனர்.
பின்னர் அவர்கள் அகதிகள் மறுவாழ்வு துறை ஆணையரின் அனுமதிக்கு பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பின்னர் 10 பேரும் தங்கள் பெயரை பதிவு செய்வதற்காக மண்டபம் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அகதிகளில் ஒருவரான நடராஜா கூறுகையில், நான் ஒரு விவசாயி. விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. எந்த நேரமும் குண்டுச் சத்தம் கேட்டபடி இருக்கிறது. உயிருக்குப் பயந்துதான் இங்கு வந்து விட்டோம் என்றார்.
கடந்த 1ம் தேதி 9 பேர் அகதிகளாக தமிழகம் வந்தனர். இந்த நிலையில் மேலும் 10 பேர் வந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications