கோமாவில் பெண் - போலி டாக்டர் மீது புகார்
சென்னை:சென்னை அருகே போலி டாக்டர் ஒருவர் அளித்த தவறான சிகிச்சையால் 44 வயது பெண் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோமா நிலையில் இருந்த பெண்ணுடன் காவல்துறை ஆணையரை சந்தித்த அவரது மகள் புகார் கொடுத்தார்.
சென்னை அருகே உள்ளது நன்மங்கலம். இப்பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். நேற்று காலை கோமா நிலையில் இருக்கும் தனது தாயார் கோகுலலட்சுமியை (44) ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் ஆணையரை சந்தித்த அவர் அவரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், எனது தாய் கோகுலட்சுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. நங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தோம். அங்கும் அவரது உடல்நிலை சரியாகவில்லை. மேலும் மோசமானது.
இதுகுறித்து டாக்டர்களிடம் கேட்டபோது, எனது தாய் கோமா நிலைக்கு போய் விட்டதாக கூறினர். மேலும் ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் வேறு மருத்துவமனைக்கு எனது தாயாரை அழைத்துச் சென்றனர். அங்கும் ஒரு வாரம் வரை சிகிச்சை அளித்தனர்.
அதன் பிறகு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறி எனது தாயாரை என்னிடம் ஒப்படைத்தனர். அவருக்கு அதிக அளவில் மயக்க மருந்து கொடுத்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு விட்டது.
உடனே வேறு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளித்து
தற்போது கோமா நிலையில் அவர் இருக்கிறார். அவரது உடல் நிலையில் மாற்றமே இல்லை.
எனது தாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் போலி டாக்டர் என்று எனக்குத் தெரிய வந்துள்ளது. அவர் முறையாக மருத்துவம் படிக்காதவர். பலருக்கு இது போன்று தவறான சிகிச்சை அளித்து வந்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் தினேஷ்குமார்.