சென்னையில் திடீர் மழை
சென்னை: கோடை காலம் ஆரம்பித்து விட்டதோ என எண்ணும் அளவுக்கு வெயில் அடித்துக் கொண்டிருந்த சென்னையில் இன்று காலை திடீரென மழை பெய்து சென்னைவாசிகளை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் வந்த வேகத்தில் மழை நின்றதால் அது புழுக்கத்தை கிளப்பி விட்டுள்ளது.
சென்னையில் மழைக்காலம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவே கருதும் அளவுக்கு கடந்த பல நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இரவு நேர வெப்பநிலையும் கூட தற்போது கூடியுள்ளது. பனியும் கூட ஓரளவு குறைந்துள்ளது.
இதனால் வெயில் காலம் ஆரம்பித்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு வெயிலும், புழுக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று பிற்பகல் சென்னை நகரின் பல பகுதிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் திடீர் மழை பெய்தது.
நகரின் உட்புறப் பகுதிகளில் சற்றே வெளுத்து வாங்கும் அளவுக்கு அது கன மழையாக இருந்தது. இருப்பினும் அதிக நேரம் பெய்யாமல் மழை நின்று விட்டது. அதேசமயம் புறநகர்ப் பகுதிகளிலும் சடசடவென பெய்ய ஆரம்பித்த மழை அதே வேகத்தில் நின்றது.
இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் வியப்படைந்தனர். ஆனால் வந்த வேகத்தில் மழை நின்றதால் புழுக்கம் அதிகரித்தது.
தொடர்ந்து வானம் மேக மூட்டமாக இருந்தபோதிலும், லேசான வெயிலும் தொடருகிறது.
தென்மாவட்டங்களில் மழை:
இதே போல் தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சிவகாசி, பெரியகுளம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது.