பெரிய கட்சிகள் மிரட்டுகின்றன - கார்த்திக் புகார்
சென்னை: பார்வர்டு பிளாக் கட்சியை சில பெரிய கட்சிகள் மிரட்டுகின்றன. ஆனால் அப்படி மிரட்டுபவர்கள்தான் எங்களது வளர்ச்சியைப் பார்த்து மிரண்டு போவார்கள் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
இன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் அகில இந்திய தலைவர் பிஸ்வாஸ் சென்னை வந்தார். செய்தியாளர்களை கார்த்திக்குடன் சேர்ந்து சந்தித்தார்.
அப்போது கார்த்திக் பேசுகையில், பல்வேறு இடையூறுகளுக்கிடையே பார்வர்டு பிளாக் கட்சி தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. 15 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நேற்றும், இன்றும் ஆலோசனை நடத்தினோம்.
எங்கள் கட்சியின் வளர்ச்சியை பல பெரிய கட்சிகள் தடுக்க முயன்று வருகிறது. அவர்களிடமிருந்த தொடர்ந்து மிரட்டல்கள் வருகிறது. பார்வர்டு பிளாக் கட்சியை யாரும் மிரட்ட முடியாது. எங்களை மிரட்டுபவர்கள் மிரண்டு போவார்கள்.
நானும், சரத்தும் பாஸ்!
சரத்குமாரும், நானும் நல்ல நண்பர்கள். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாஸ் என்றுதான் அழைத்துக் கொள்வோம்.
சசிகலாவின் கணவர் நடராஜன் தஞ்சையில் நடத்திய கலைவிழாவில் நான் கலந்து கொண்டு பேசினேன். இதில் வேறு அரசியல் முக்கியத்துவம் எதுவும் இல்லை.
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை யாருடைய கொள்கைகள் எங்களுக்கு ஒத்து வருகிறதோ அவர்களுடன் கை கோர்ப்போம்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்கக் கோரி மனு கொடுத்திருந்தோம். அது பரீசிலக்கப்பட்டு வருவதாக மத்திய அரசிடமிருந்து கடிதம் வந்துள்ளது என்றார் கார்த்திக்.
பிஸ்வாஸ் கூறுகையில், தமிழ் மாநில பார்வர்டு பிளாக் மாநாடு மே 3 மற்றும் 4ம் தேதிகளில் நெல்லையில் நடக்கிறது. அப்போது மாநில அளவிலான புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications