ஆதரவு வாபஸ் - மாயாவதி மறுபடியும் மிரட்டல்
போபால்: என் மீதான தாஜ் வணிக வளாக வழக்கை மீண்டும் விசாரித்து எனக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் கூட்டணி அரசு முயற்சிக்கிறது. எனவே அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்பப் பெறத் தீர்மானித்துள்ளோம். இதுகுறித்து மார்ச் 10ம் தேதிக்குள் முடிவெடுக்கப்படும் என உ.பி. முதல்வர் மாயாவதி கூறியுள்ளார்.
உ.பி. முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி போபாலில் நடந்த பகுஜன் சமாஜ் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசுகையில்,
பகுஜன் சமாஜ் கட்சியின் அபரிமித வளர்ச்சியை கண்டு பொறாமையடைந்த பாரதிய ஜனதா கட்சி முன்பு, என் மீது தாஜ்மகால் வளாகம் கட்டுவது தொடர்பான வழக்கை போட்டது.
தற்போதுள்ள காங்கிரஸ் அரசு இந்த பிரச்னையை மீண்டும் கிளப்பியுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா அரசும், தற்போதுள்ள காங்கிரஸ் அரசும் தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்தினருக்கு தொந்தரவு கொடுத்தனர்.
82 வயதான என் பெற்றோரையும், உறவினர்களையும் தொந்தரவு செய்தனர். அவர்கள் பட்ட துயரம் மத்தியில் உள்ளவர்களுக்கு தெரியாது. காலம் ஒரு நாள் மாறும். பகுஜன் சமாஜ் கட்சி மத்தியில் ஆட்சியில் அமரும் போது அந்த துயரத்தை அவர்கள் உணரும் காலம் வரும்.
தனிப்பட்ட முறையில் தொந்தரவு செய்வது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்ததல்ல. எனக்கு கொலை மிரட்டல் இருப்பதால் கருப்பு பூனை படை பாதுகாப்பு அளிக்கும் படி பல முறை மத்திய அரசிடம் கேட்டேன். இந்த விஷயத்தை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதன் மூலமாக எனக்கு மறைமுக அரசியல் நிர்பந்தம் செய்கிறது மத்திய அரசு.
இவ்வளவு நிர்பந்தம் கொடுக்கும் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
தற்போது உத்தரபிரதேச சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் முடிகிறது. எனவே, இக்கூட்டத்தொடர் முடிந்ததும் மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெறும் விஷயத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார் மாயாவதி.
ஆனால் மாயாவதியின் மிரட்டலை காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுபோன்ற மிரட்டலுக்கு அடிபணியாது. ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து தாராளமாக மாயாவதி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று காங்கிரஸ் கட்சி அதிரடியாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications